Thursday, June 20, 2019

30 #வகை #நம்ம #வீட்டு #சமையல

30 #வகை #நம்ம #வீட்டு #சமையல

கொள்ளுப் பாட்டி, பாட்டி, அம்மா என்று வழிவழியாக நமக்கு கொண்டு சேர்த்த உணவு வகைகளை ஆராய்ந்து 30 வகை நம்ம வீட்டு சமையல் ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.

கூழ் தோசை

தேவையானவை:
பச்சரிசி – 250 கிராம், பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, வெங்காயம் – ஒன்று, கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன் எண்ணெய் – உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். ஒரு கிண்ணம் மாவை எடுத்து உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைத்து வாணலியில் விட்டு நன்கு கிளறி கூழ் பதத்துக்கு வந்ததும் இறக்கவும். இதை மீதமுள்ள மாவுடன் சேர்த்துக் கலக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு தாளித்து, சீரகம், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி… கலந்து வைத்த மாவுடன் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து (மிதமான தீயில் அடுப்பை எரியவிடவும்) மாவை பரவலாக ஊற்றி, லேசாக எண்ணெய் விட்டு, நன்கு வெந்த உடன் எடுக்கவும்.

குறிப்பு: இந்தத் தோசைக்கு உளுந்து தேவை இல்லை. ரவா தோசை போல டேஸ்ட்டாக இருக்கும்.

தேங்காய் தோசை

தேவையானவை:
தேங்காய்த் துருவல் – 2 கப், பச்சரிசி – 200 கிராம், எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். அதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்க்கவும். தோசைக்கல்லில் மாவை ஊத்தப்பம் அளவில் ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:
தேங்காய் அதிகம் மிகுந்துவிடும் சமயத்தில், அதைப்  பயன்படுத்தி இந்த தோசையைத் தயாரிக்கலாம். இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

புளிப் பொங்கல்

தேவையானவை:
பச்சரிசி – 200 கிராம், புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு, காய்ந்த மிளகாய் – 2, கடுகு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பச்சரிசியை  உப்புமா ரவை பதத்துக்கு மிக்ஸியில் உடைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய மிளகாய் தாளித்து, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். இதனுடன் அரிசி ரவையை சேர்க்கவும். புளிக் கரை சலும், தண்ணீரும் சேர்த்து ரவை யின் அளவுக்கு நான்கு பங்கு என்ற விகிதத்தில் எடுத்து, ஊற்றிக் கிளறி, குக்கரை மூடி, மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:
இதற்கு பொரித்த அப்பளம், வடகம் சிறந்த காம்பினேஷன்.

பச்சரிசி மாவு உப்புமா

தேவையானவை:
பச்சரிசி மாவு – 200 கிராம், புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 6 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அரிசி மாவுடன் உப்பு சேர்த்து, புளித் தண்ணீர் விட்டு கெட்டியாக இல்லாமல், தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, மாவை சேர்த்து உதிரி உதிரியாக வரும் வரை மிதமான தீயில் கிளறி இறக்கவும்.

கறிவேப்பிலை – மிளகு – பூண்டு குழம்பு

தேவையானவை:
பூண்டு – 100 கிராம், மிளகு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 100 மில்லி.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, அரைத்துக்கொள்ளவும். பூண்டினை தோல் உரித்து எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். வாணலியில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் வதக்கிய பூண்டு சேர்த்து, அரைத்து வைத்ததையும் சேர்க்கவும். பூண்டு வெந்ததும், கடுகு – உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

கருப்பட்டி தோசை

தேவையானவை:
கருப்பட்டி – 100 கிராம், கோதுமை மாவு – 100 கிராம், அரிசி மாவு – 4 டீஸ்பூன், நெய் – 100 மில்லி, தேங்காய்த் துருவல் – ஒரு கப்.

செய்முறை:
கருப்பட்டியை பொடித்து தண்ணீர் விட்டுக் கரைத்து, வடிகட்டவும். இதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தீயை மிதமாக வைத்து, மாவை கல்லில் ஊற்றி, இருபுறமும் நெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:
இதே மாவில் அப்பம் தயாரிக்கலாம்.

மோர்க்களி

தேவையானவை:
இட்லி அரிசி – 200 கிராம், புளித்த தயிர் – 100 மில்லி, பெருங்காயத்தூள் – சிறிதளவு, மோர் மிளகாய் – 2, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை ஒரு மணி நேரம்ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகை சேர்க்கவும். கடுகு கொஞ்சம் வெடித்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து, மோர் மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். அரிசி மாவுடன் தயிர், உப்பு சேர்த்துக் கரைத்து இதில் விட்டு நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு:
ஒரு பெரிய பிளேட்டில் இதனைப் போட்டு ஆறிய உடன் துண்டுகளாக்கியும் சாப்பிடலாம். இட்லி மிளகாய்ப்பொடி இதற்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.

கத்திரிக்காய் ரசவாங்கி

தேவையானவை:
கத்திரிக்காய் – 250 கிராம், புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு சிறிய கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்து அரைக்கவும். துவரம் பருப்பை வேகவைக்கவும். கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து வேகவிடவும். இதனுடன் அரைத்து வைத்த பொடி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.

இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

பீர்க்கங்காய் சட்னி

தேவையானவை:
பீர்க்கங்காய் (சிறியது) – 2, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடலைப்பருப்பு, கடுகு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, பீர்க்கங் காயை தோல் சீவி நறுக்கி வதக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும். வதக்கிய பீர்க்கங் காயுடன் தேங்காய்த் துருவல், உப்பு, வறுத்த கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி எல்லாம் சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து, கடுகு தாளித்துக் கலந்து பரிமாறவும்.

இது… தோசை, இட்லி, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன்.

வாழைப்பூ பொரியல்

தேவையானவை:
சிறிய வாழைப்பூ – ஒன்று, தேங்காய்த் துருவல் – ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாழைப்பூவை ஆய்ந்து, நரம்பு நீக்கி நறுக்கி… உப்பு,         மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து, ஆறிய உடன் நன்கு பிழிந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளித்து, வேகவைத்த வாழைப்பூ, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பப்பாளி கூட்டு

தேவையானவை:
பப்பாளிக்காய் – ஒன்று, தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பாசிப்பருப்பு – ஒரு கப்,  பெருங்காயத்தூள் – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பப்பாளிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். தேவையான உப்பு சேர்த்து வேகவைக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து குழைவாக வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய்த் துருவலை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன் வேகவைத்த பப்பாளிக்காய், வேகவைத்த பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பை எண்ணெயில் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

நெல்லிக்காய் பச்சடி

தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் – 6, தயிர் – ஒரு கப், தேங்காய்த் துருவல் – ஒரு டீஸ்பூன்,  இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – ஒன்று, கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
நெல்லிக்காயை நறுக்கி, கொட்டை நீக்கி இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனை தயிருடன் சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

பாகற்காய் பிட்லை

தேவையானவை:
பாகற்காய் – 200 கிராம், புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு, துவரம்பருப்பு – 100 கிராம், கடலைப்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
துவரம்பருப்பை நன்கு வேகவைக்கவும். பாகற்காயை வில்லைகளாக நறுக்கி தண்ணீரில் வேகவைக்கவும். சிறிது வெந்த உடன் தண்ணீரை வடிக்கவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் புளிக்கரைசலை விட்டு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். இதில் வேகவைத்த பாகற்காயை சேர்க்கவும். பின்னர், அரைத்து வைத்திருக்கும் விழுது, வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து இதனுடன் சேர்த்து இறக்கினால்… பாகற்காய் பிட்லை தயார்.

பிரண்டைத் துவையல்

தேவையானவை:
இளம் பிரண்டை – 10 துண்டுகள், புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன். உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பிரண்டைத் துண்டுகளை பொடியாக நறுக்கி, வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, தோல் சீவி நறுக்கிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலையை தனியாக எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து… புளி, உப்பு, தேங்காய் துருவல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு:
இந்தத் துவையல், ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

வேப்பம்பூ ரசம்

தேவையானவை:
வேப்பம்பூ – ஒரு கைப்பிடி அளவு, புளி – ஒரு நெல்லிக் காய் அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வேப்பம்பூவை சிறிதளவு எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளித்து, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். சிறிது கொதித்ததும் வறுத்த வேப்பம்பூ, பெருங்காயத்தூள் சேர்த்து… கொதித்ததும் சிறிதளவு தண்ணீர் விட்டு, மேலும் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு:
வேப்பம்பூ பித்தத்தை தணிக்கும். வேப்பம்பூவை வறுத்து சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.

கீரை குணுக்கு

தேவையானவை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, கீரை – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
மூன்று பருப்புகளையும் ஒன்றுசேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து, வடிகட்டி… காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய கீரையை வதக்கி, அரைத்த மாவுடன் கலந்து பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

மிளகு மோர்க்குழம்பு

தேவையானவை:
சேனைக்கிழங்கு – 100 கிராம், அரிசி – ஒரு டீஸ்பூன், மிளகு – 20, கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், மோர் – 250 மில்லி, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு மிளகை வறுத்துக்கொள்ளவும். மிளகுடன் அரிசி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். சேனைக்கிழங்கை தோல் சீவி, பொடியாக நறுக்கி வேகவிடவும். மோருடன் உப்பு, அரைத்த மிளகு – அரிசி கலவை, வேகவைத்த சேனையையும் சேர்த்து, லேசாக கொதிக்க விட்டு… கடுகு, வெந்தயத்தை எண்ணெயில் தாளித்துச்  சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:
ரத்தத்தை சுத்தப்படுத்தும் குணம் உடை யது மிளகு… நோய்களை குணப்படுத்தும் சக்தியும் வாய்ந்தது.

பச்சை சுண்டைக்காய் பொரியல்

தேவையானவை:
பச்சை சுண்டைக்காய் – 200 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் –  ஒரு கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை நசுக்கிப் போட்டு வதக்கவும். வதங்கிய உடன் சிறிதளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.

வாணலியில் ஒரு  டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, வேகவைத்த சுண்டைக்காயைப் போட்டு, தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

மாங்காய் வற்றல் குழம்பு

தேவையானவை:
மிளகு – 25, காய்ந்த மிளகாய் – 4, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், மாங்காய் வற்றல் – 4 துண்டுகள், புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, துவரம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து,  சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். புளியைக் கரைத்து, அதனுடன் அரைத்த பருப்புக் கலவை, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, சிறிது கொதித் ததும் மாங்காய் வற்றலைப் போட்டு, வெந்ததும் இறக்கவும்.

குறிப்பு:
மாங்காய் சீஸனில் மாங்காயை வாங்கி நறுக்கி, உப்பு சேர்த்து, ஊறவைத்து, காயவைத்து எடுத்து வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

வெங்காயத் துவையல்

தேவையானவை:
சின்ன வெங்காயம் – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 3, உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன், புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

இது… தோசை, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன். சாதத்துடன் சேர்த்துப் பிசைந்தும் சாப்பிடலாம்.

பலாக்கொட்டை பொடிமாஸ்

தேவையானவை:
பலாக்கொட்டை – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பலாக்கொட்டையை நசுக்கி, தோல் உரித்து, உப்பு சேர்த்து, குக்கரில் போட்டு இரண்டு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். வேகவைத்த பலாக்கொட்டையை தண்ணீர் வடித்து இதனுடன் சேர்த்துக் கலந்து, கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து சேர்த்து, தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும். பிறகு, எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு கலக்கவும்.

குறிப்பு: பலாக்கொட்டையை சாம்பார், கூட்டு தயாரிக்க பயன்படுத்தலாம். மிதமான தீயில் சுட்டும் சாப்பிடலாம்.

பொரித்த ரசம்

தேவையானவை:
மிளகு – 25 , கடுகு, சீரகம் – ஒரு தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் நெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, பெருங்காயத் தூள், மிளகுத்தூள் போட்டு வறுத்து, உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

புளி சேர்க்காத இந்த ரசமும், பருப்புத் துவையலும் நல்ல காம்பினேஷன்.

பால் கொழுக்கட்டை

தேவையானவை:
பச்சரிசி – 200 கிராம், தேங்காய்த் துருவல் – ஒரு கப், பொடித்த வெல்லம்  – ஒரு கப், ஏலக்காய்தூள் – சிறிதளவு, காய்ச்சிய பால் – 250 மில்லி.

செய்முறை:
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் இந்த மாவைப்போட்டு கெட்டி யாகக் கிளறி, ஆறிய உடன் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண் ணீரைக் கொதிக்க வைத்து உருட்டி வைத்த உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். நன்கு வெந்த உடன் வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டு, ஏலக்காய்த்தூள் போட்டு, காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

அப்பளக் குழம்பு

தேவையானவை:
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, அப்பளம் – ஒன்று, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, அப்பளத்தை சிறியதாக கிள்ளிப்போட்டு வறுக்கவும். பின்னர் சாம்பார் பொடியை சேர்த்து லேசாக வறுத்துக்கொண்டு, புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

குழம்பு வைக்க காய் இல்லாத நேரத்தில் இந்த அப்பளக் குழம்பு பெரிதும் உதவும்.

புடலங்காய் பொரித்த குழம்பு

தேவையானவை: சிறிய புடலங்காய் – 2, பாசிப்பருப்பு – 100 கிராம், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, தேங்காய்த் துருவல் – ஒரு கப், கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
புடலங்காயை விதை நீக்கி, பொடியாக நறுக்கி வேகவிடவும். பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து குழைவாக வேகவிடவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு இரண்டையும் வாணலியில் லேசாக எண்ணெய் விட்டு வறுத்து… தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். வேகவைத்த புடலங்காயை வாணலியில் சேர்த்து, வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு, கடுகு, பெருங் காயத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.

இதை சாதத்துடன் நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

தேவையானவை:
கொத்தவரங்காய் – 200 கிராம், துவரம்பருப்பு – ஒரு கப், கடலைப்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஒன்றாக ஊறவைத்து, தண்ணீர் வடித்து காய்ந்த மிளகாய் சேர்த்து, கெட்டியாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த பருப்பைப் போட்டு உதிரியாக வரும் வரை கிளறவும். இதனுடன் பெருங்காயத்தூள் போட்டுக் கலந்து, வேகவைத்த கொத்தவரங்காயும் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

மணத்தக்காளி வத்தக்குழம்பு

தேவையானவை:
மணத்தக்காளி வற்றல் – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
புளியை நன்கு கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து… மணத்தக்காளி வற்றல், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். இதில்  புளிக்கரைசலை விட்டு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

கீரைத்தண்டு மோர்க்கூட்டு

தேவையானவை:
கீரைத்தண்டு (பெரியது) – ஒன்று, தயிர் – 100 மில்லி, தேங்காய் துருவல் – ஒரு கப், பச்சை மிளகாய் – ஒன்று, தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கீரைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து  வேகவைக்கவும். தேங்காய், பச்சை மிளகாயை விழுதாக அரைத்து, தயிருடன் கலக்கவும். இதை வேகவைத்த கீரைத் தண்டுடன் கலந்து லேசாக கொதிக்கவிட்டு, தேங் காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துக் கலந்து இறக்கவும்.

மாங்காய் பச்சடி

தேவையானவை:
மாங்காய் – ஒன்று, பொடித்த வெல்லம் – ஒரு கப், தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் (சிறியது) ஒன்று, கடுகு, எண்ணெய், உப்பு – சிறிதளவு.

செய்முறை:
தேங்காய் – பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும். மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு போட்டு வேகவைக்கவும். மாங்காய் நன்றாக வெந்ததும் வெல்லத்தை சேர்த்து, பச்சை மிளகாய் விழுதையும் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி… கடுகு தாளித்து சேர்க்கவும்.

டாங்கர் பச்சடி

தேவையானவை:
உளுத்தம்பருப்பு – 100 கிராம், கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், தயிர் – ஒரு கப், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பை மிக்ஸியில் நைஸாக தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ள வும். மாவுடன் தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும். கடுகு, சீரகத்தை எண்ணெயில் தாளித்து சேர்த்துக் கலந்து, பரிமாறவும்.

No comments:

Post a Comment