Thursday, January 4, 2018

ரம்ஜான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்ய தெரியுமா

அதிரைமீடியா:ஜன.04

ரம்ஜான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்ய தெரியுமா…?

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 100 கிராம்
பயத்தம் பருப்பு – 25 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
கேரட் – 1
தக்காளி – 1
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பிரியாணி இலை – 1
கொத்தமல்லி – சிறிது
புதினா – சிறிது
தேங்காய் பால் – அரை கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கேரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். அரிசியை நன்கு நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும். மிக்சியில் சீரகம், வெந்தயத்தை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 650 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் பயத்தம் பருப்பு, அரிசியைப் போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரானது நன்கு கொதித்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கேரட், புதினா, பிரியாணி இலை, அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட்டு, தீயை குறைவில் வைத்து, குக்கரை மூடி 15 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். கலவையானது நன்கு வெந்ததும், அதனை பருப்பு மத்து கொண்டு நன்கு மசித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தேங்காய் பாலை ஊற்றி நன்கு நுரை வரும் வரை கொதிக்க விட்டு, அதை மசித்து வைத்துள்ள கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கவும். சுவையான நோன்பு கஞ்சி தயார்.

No comments:

Post a Comment