Sunday, February 17, 2019

வீடு அல்லது காலி மனை வாங்கும்

வீடு அல்லது காலி மனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் !

1. குறைந்தது முப்பது வருடங்கள் வில்லங்க சான்றிதளை ஆராய வேண்டும். இந்த முப்பது வருடங்களில் சொத்து யாரிடமிருந்து யாருக்கு மாறியது; மாறிய போது சரியான வாரிசு தாரர்களுக்கோ, உயில் எழுதிய நபருக்கோ சென்றதா போன்ற விபரங்கள் சரி பார்க்கப்பட வேண்டும்.

2. வில்லங்க பத்திரம் மட்டுமல்லாது மூல பத்திரங்களின் ஒரிஜினல் சரி பார்ப்பதன் மூலமே மேலே சொன்ன “சொத்து சரியாக கை மாறியதா ” என்பதை முழுதாக அறிய முடியும்.

3. கட்டப்பட்ட வீடு எனில், அந்த பில்டிங் கட்டுவதற்கான அங்கீகாரம் பெறப்பட்டதா.. காலி மனை (ப்ளாட்) எனில், அங்கு மனை போட CMDA அல்லது DTCP அங்கீகாரம் உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இந்த அங்கீகாரம் இருந்தால் தான் அதை ”அப்ரூவ்டு மனை” என சொல்ல முடியும். அப்போது தான் அந்த மனையில் வீடு கட்ட வங்கிகள் கடன் தரும். 

4. நீங்கள் வாங்க எண்ணும் இடத்துக்கான நில வரி அல்லது வீட்டு வரி கடந்த வருடங்களில் கட்டப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

இதனை பார்ப்பதற்கு இரு காரணங்கள். ஒன்று யார் பெயரில் வீட்டு வரி கட்ட பட்டுள்ளதோ அவர் தான் வீட்டின் உரிமையாளர் என்பது அதன் மூலம் தெரிய வரும்.

அடுத்தது கடந்த சில வருடங்களில் அவர் வரி கட்டா விடில், சொத்து உங்கள் கைக்கு வந்த பின் அந்த வரிகளை நீங்கள் கட்ட நேரிடலாம். சிட்டா, அடங்கல் போன்றவையும் கூட வரி ரசீதுகள் தான். அவையும் சரி பார்த்தல் அவசியம்.

5. சொத்தை விற்க பொது அதிகாரம் தரப்பட்டிருந்தால், அந்த பத்திரமும் அது தான் இறுதியான பத்திரமா என்றும் சரி பார்க்க பட வேண்டும்.

6. சற்றே பெரிய காலி இடம் எனில் அந்த இடத்தில் பார்க் உள்ளிட்ட இடங்களுக்கு இடம் விடப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். மேலும் பார்க்குக்கு ஒதுக்கிய இடத்தை உங்களுக்கு விற்க முயல்கின்றனரா என்றும் சரி பார்த்தல் அவசியம்.

7. இடத்துக்கான கைடு லைன் வேல்யூ என்ன என்பதை பார்த்து அதன் அடிப்படையில் ( சொத்து விலையில் 7 % ) ஸ்டாம்ப் பேப்பர் வாங்க வேண்டும்.

8. சொத்தை இன்னும் சில மாதங்கள் கழித்து தான் உங்கள் பெயரில் ரிஜிஸ்தர் செய்ய போகிறீர்கள், தற்போது அட்வான்ஸ் தான் தருகிறீர்கள் என்றால், எத்தனை நாளுக்குள் ரிஜிஸ்தர் செய்ய வேண்டும், பணம் எப்போது தரப்படும், முதலில் தரும் அட்வான்ஸ் எவ்வளவு என்பவை குறிப்பிட்டு ஒரு அக்ரிமென்ட் போட்டு கொள்ளுதல் நல்லது. மிக எச்சரிக்கையான சிலர் இந்த அக்ரிமென்ட்டையும் பத்திர அலுவலகத்தில் ரிஜிஸ்தர் செய்து விடுவார்கள்.. 

9. நிலத்துக்கான பட்டா வாங்கப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். பட்டாவும் நிலத்தின் உரிமையை நிர்ணயிக்கும் தாக்கீது தான்.

10. இவை அனைத்தும் சரி பார்ப்பதன் முக்கிய நோக்கம் நிலத்தின் உரிமையாளர் யார் என்று பார்த்து அவர் தான் உங்களுக்கு விற்கிறாரா, அதை விற்க அவருக்கு உரிமை உள்ளதா என நிர்ணயிக்க தான்.

உரிமையாளர் தான் உங்களுக்கு விற்கிறாரா என அனைத்து விதத்திலும் உறுதி செய்த பின் தான் அந்த இடம் வாங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

இதுவரை படித்ததில் ஒரு விஷயம் உங்களுக்கு புரிந்திருக்கும். சொத்து வாங்குவது என்பது மிக டெக்னிகல் ஆன விஷயம்.

இத்தனை விஷயங்களை சாதாரண மக்களால் படித்து புரிந்து கொள்ள முடியாது. சொத்து விஷயங்களை டீல் செய்யும் வழக்கறிஞராக பார்த்து அவரிடம் இந்த விஷயங்களை சரி பார்த்த பிறகே நிலம் வாங்க முடிவெடுப்பதே நல்லது.

பல லட்சங்கள் செலவு செய்து ஒரு சொத்து வாங்கும் போது சில ஆயிரம் வழக்கறிஞருக்கு செலவு செய்து அதில் வில்லங்கம் இருக்கிறதா என பார்த்து விடுவது நிம்மதியாக இருக்க உதவும்.....

பா.வெ.

No comments:

Post a Comment