Monday, June 30, 2014

எடையைக் கூட்டுமா அரிசி உணவு?

எடையைக் கூட்டுமா அரிசி உணவு?
''களுடன் வெளியே போகும்போதெல்லாம் என் மகளைப் பார்ப்பவர்கள் என்னிடம், 'உன் தங்கையா?’ என்று கேட்கின்றனர். இதனால், நாம் உடல் பருமனாக இருக்கிறோமோ என்று நினைத்து, சாதத்தைத் தவிர்த்துவிட்டு, வெறும் ரொட்டி, பிரெட், ஓட்ஸ் கஞ்சி, பால், ஜூஸ் மட்டுமே சாப்பிடுகிறாள் என் மகள். அரிசியைத் தவிர்ப்பதால் உடலுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா?' என்றார் என்னிடம் வந்த ஒரு தாய்.
இன்றைய பெரும்பாலான டீன் ஏஜ் பெண்கள், அரிசியில் கலோரி அதிகம். வெயிட் போட்டுவிடும் என்று, சாப்பிடும் அளவை மிகவும் குறைத்துக்கொள்கின்றனர். அதிலும் சிலர் ஒரு கப் அளவுகூடச் சாதம் சாப்பிட மறுக்கின்றனர். இது மிகவும் தவறு. வளரும் பருவத்தினருக்கு அரிசி சாதம் ரொம்பவே முக்கியம்’ என்கிற சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி, இது பற்றி மேலும் விவரித்தார்.
'மனிதனுக்கு உணவுகளிலிருந்து கிடைக்கும் சத்துக்களில் பெரும் பங்கு தானிய உணவுக்குத்தான் சேரும். அதில் அரிசியும் ஒன்று. பண்டைய காலத்திலிருந்து அரிசி மற்றும் அதைக்கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், சமீபகாலமாக இளம் வயதினர் அரிசி உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்தால், தங்கள் உடல் எடையைக் குறைத்துவிடலாம் என்ற குருட்டுத்தனமான பழக்கத்தை நம்பி வருகின்றனர். இந்த உணவுப் பழக்கம் பல உடல்நலக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.
அரிசி, நம் உடலுக்குத் தேவையான ரிபோஃபிளேவின் (Riboflavin) உள்ளிட்ட பி காம்ளெக்ஸ் மற்றும் இதர வைட்டமின்களைத் தரக்கூடியது. தினமும் அரிசியை 200 முதல் 350 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அரிசியில் நார்ச்சத்து என்பது மிகமிகக் குறைவு. எனவே அரிசியின் முக்கால்வாசி அளவுடன் கண்டிப்பாகக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். குறைந்தபட்சம் இரண்டு காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது. அதில் ஒன்று கீரையாக இருந்தால், மிகச் சிறப்பு. இதுவே ஒரு சமச்சீரான உணவாக இருக்கும்.
அரிசி உணவு மட்டுமே உடல் பருமனுக்குக் காரணம் என்பது முற்றிலும் தவறு. இன்றைய அவசர வாழ்க்கையில், பெரும்பாலான டீன் ஏஜ் பெண்கள் சரியான நேரத்தில் தூங்குவதோ, உண்பதோ கிடையாது. இரவு நீண்ட நேரம் விழித்திருந்து, காலை லேட்டாக எழுகிறார்கள். இதனால், காலை உணவை மதிய வேளையில் உண்பதால், மதிய உணவும், இரவுக்கான உணவும் தள்ளிப்போகிறது. இது முற்றிலும் தவறான பழக்கம். உணவு சரியாகச் செரிமானம் ஆகாது. மேலும், இப்படியான பழக்கம் தொடரும்போது, அரிசி உணவு மட்டுமல்லாமல், எந்த உணவும் உடலைப்பருமனாக்கிவிடும். உடல் ஆரோக்கியத்தைப் பெரும் அளவில் பாதித்துவிடும். எனவே, தகுந்த நேரத்துக்குத் தூங்குதல் மற்றும் உணவு உண்ணுதல் என்பது மிக அவசியம். அரிசியையும் கோதுமையையும் கிட்டத்தட்ட சரிசமமாக உண்ணவேண்டும்.
அரிசி உணவை முற்றிலும் தவிர்க்கும்போது பி காம்ப்ளெக்ஸ் மற்றும் இதர வைட்டமின்கள் நம் உடலுக்குக் கிடைக்காது. ரிபோஃபிளேவின் குறைபாட்டால் வாய்ப்புண், உதடு வெடிப்பு, நாக்குப்புண் போன்ற பாதிப்புகள் வரும். அதிலும், டீன் ஏஜ் பெண்களுக்கு நரம்புத் தளர்ச்சி வருவதுடன் உடல் சோர்வு ஏற்படும்' என்கிற கிருஷ்ணமூர்த்தி, எந்த வகையான அரிசி சிறந்தது என்பதையும் சொன்னார்.
'உழைப்புக்கு அரிசி உணவுதான் பெஸ்ட். சின்ன வயதிலே அரிசி சாதத்தைக் குறைத்து சாப்பிட்டு வந்தால், நாற்பது வயதுக்கு மேல் உடலில் தளர்ச்சி ஏற்பட்டுவிடும். புழுங்கல் அரிசியை வீட்டில் அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தலாம். சிகப்பு அரிசி, கைக்குத்தல் அரிசி, கேரளா அரிசி போன்றவை அரிசி வகைகளில் மிகவும் சிறந்தவை. இவற்றின் சுவை சற்றுக் குறைவாக இருந்தாலும் மற்ற அரிசி வகைகளைவிட உடலுக்கு நல்லது. பாலிஷ் செய்த அரிசியைத் தவிர்ப்பது நல்லது' என்றார்.
- செ.கிஸோர் பிரசாத் கிரண்
படம்: ஜெ.வேங்கடராஜ்
Source Vikatan

நோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி !!

நோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி !!

புனித ரமலான் மாதம் வந்துவிட்டது. ரமலான் மாதத்தில் அனைத்து மதத்தினரும் விரும்பி உண்ணக் கூடியது நோன்புக் கஞ்சி. நாள் முழுவதும் நோன்பு நோற்று வாடிப் போய் இருப்பவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது இந்த கஞ்சி. அத்தகைய நோன்புக் கஞ்சியை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி = 500 கிராம்
பூண்டு = 1 முழு பூண்டு
கடலைப்பருப்பு = 50 கிராம்
வெந்தயம் = 2 தேக்கரண்டி
இஞ்சி = இருவிரல் அளவு
சீரகப்பொடி = 2-3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி = 1 டீ ஸ்பூன்
மிளகாய்பொடி = அரை டீ ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
பெரிய வெங்காயம் = 2
கேரட் = பாதி
தக்காளி = 2
சமையல் எண்ணை = 50 மில்லி
பச்சை மிளகாய் = 2-3 (காம்பு நீக்கியது)
புதினா+மல்லி = தலா ஒரு கொத்து
எலுமிச்சம் பழம் = 1
தேங்காய்ப் பால் = 300 மில்லி
மட்டன் எலும்பு/கறி = 100 கிராம்
சமைக்கும் முன்பு செய்ய வேண்டியவை:
1) சாதாரண தண்ணீரில் பச்சரிசி, வெந்தயம், கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி தண்ணீர் வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
2) ஆட்டுக்கறி அல்லது நெஞ்செலும்பை நீரில் அலசி உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்பொடி ஆகியவற்றை கலந்து தயாராக வைக்கவும்.
3) தக்காளி, வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.
4) புதினா, கொத்தமல்லியை காம்பு நீக்கி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
5) கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
6) எஞ்சிய இஞ்சியையும், பூண்டையும் தோல் நீக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். செய்முறை:
7) சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.
8) நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும்.
9) ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்பையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
10) நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
11) வதங்கும்போது சீரகப் பொடி, மஞ்சள் பொடியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
12) மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
13) அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1:3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும்.
14) கொதி வந்த பிறகு அரிசியை சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
15). கொதிக்கும்போது பாதி எலுமிச்சை சாற்றை ஊற்றவும்.
16) தேவையான அளவு உப்பிட்டு சட்டியின் அடிப்பாகம் பிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும்.
17) அரிசி கரைந்த பிறகு தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.
18) புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும்.
சுவையான நோன்புக் கஞ்சி தயார்....

Sunday, June 29, 2014

How Long Until It’s Gone?


கிரைண்டரில் மாவரைக்கும் போது கவனிக்க வேண்டியவை

கிரைண்டரில் மாவரைக்கும் போது கவனிக்க வேண்டியவை
முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தானியங்களைச் சேர்த்து அரைக்க வேண்டும்.
இதனால், ஒரே நேரத்தில் அதிகமான தானியத்தை போட்டு கிரைண்டர் ஓவர் லோடு ஆவதைத் தடுக்கலாம்.
கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைப்பதால் உளுந்தும் கணிசமாக இருக்கும். உளுந்து மாவு கல்லோடு வீணாவது தவிர்க்கப்படும். வழவழப்பான கிரைண்டரை கழுவுவதில் இருந்தும் தப்பிக்கலாம்.
கிரைண்டருக்கு என இருக்கும் அளவுக்கு தானியத்தைப் போடுங்கள். அதை விட சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ போடலாம். ஆனால் மிகவும் குறைவாகவும், மிகவும் அதிகமாகவோ போட வேண்டாம்.
******************************************************************
******************************************************************

கிரைண்டரை கையாளும் வழிகள்
உரலுக்கு பதிலாக மாவு அரைப்பதற்கு நாம் பயன்படுத்தும் மின் சாதனம் கிரைண்டர். பொதுவாக கிரைண்டரை தக்க விதத்தில் பயன்படுத்தினால் அது பல காலம் பழுதின்றி பயன்படும்.
அந்த வகையில், கிரைண்டரில் அதற்கு தக்க அளவுக்கு பொருட்களைப் போட்டு அரைக்க வேண்டும். கூடுதலாகவோ, குறைவாக பொருட்களைப் போட்டு அரைப்பதால் கூட கிரைண்டர் விரைவில் தேய்வு அடையும்.
கிரைண்டர் வாங்கும் போது அரைக்கும் கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.
கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை சுற்றும் டிரம்மில் படாதபடியும், ஆட்டும் கல்லில் படாதபடியும் சிறிது இடைவெளி விட்டு இருந்தால் பலகை விரைவில் தேய்வதை தடுக்கலாம். மேலும் தள்ளுப்பலகை இறுக்கமாக மாட்டப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டல், மாவு எளிதாக அரைபடும்.
கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும் அதிக நாட்கள் பயன்படுத்துவதால் வழவழப்பாக மாறும். அப்போது, இரண்டுக் கல்லிலும் குழிபோடும் ஆட்களைக் கொண்டு கொத்திக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறையும் கிரைண்டர் குழவிக் கல்லை கழுவும் போது அதன் கைப்பிடியில் உள்ள சிவப்பு வாசரின் உள்ளே தண்ணீர் சென்று விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், விரைவில் கைப்பிடி தனியாகக் கழன்றுவிடும்.

Saturday, June 28, 2014

நலம் தரும் நாவல் பழம்

நலம் தரும் நாவல் பழம்


“ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் நாவல் பழ சீசன்தான். நம் ஊர்தான் நாவல் பழத்துக்குப் பூர்வீகம்.

நாவல் பழத்தில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பழத்தை அடுத்து சீதா பழத்தில்தான் கால்சியம் இருக்கிறது. இது தவிர சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது. வைட்டமின் பி1, பி2, பி6 ஒன்றாக உள்ள மிகவும் அரிதான பழம் இது’’ என்றவர், நாவல் பழத்தின் பலன்களை விவரித்தார்.

“கால்சியம், எலும்பு-களுக்கு உறுதியைக் கொடுப்-பதுடன், உடலை வலிமையாக்கும். ரத்தத்தைச் சுத்திகரித்து ரத்த விருத்திய-டையச் செய்யும். ரத்தசோகைக்கு மிகச்சிறந்த மருந்தே நாவல் பழம்தான். இதிலுள்ள வைட்டமின் சி உணவிலிருந்து இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும்.

நாவல் பழத்திலுள்ள ‘ஜம்போலினின்’ எனும் ‘குளுக்கோசைடு’ உடலில் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைத் தடுக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் நாவல் பழத்தை உணவாக அல்லா-மல் மருந்தாக பத்திய--மிருந்து 1 மண்டலத்துக்குச் சாப்பிட்டு வர, சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் இருக்கும். நாள்பட்ட சர்க்கரை நோய் உடையவர்கள் நாவல் பழ விதையை காயவைத்து பொடியாக்கி, புளித்த மோரில் கலந்து குடிக்கலாம்.

Source Vikatan

முளைக்கீரை/சிறுகீரை/ பாலக்கீரை

எந்தக் கீரையில் என்ன சத்து? 


தினமும் ஒவ்வொரு வகையான கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்துவிடும். பொதுவாகக் கீரை வகைகளில் கலோரியும் புரதமும் மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், சர்க்கரை நோயாளிகள் தாராளமாகக் கீரை சாப்பிடலாம். முதியவர்கள், கர்ப்பிணிகள், வளரும் குழந்தைகள் கீரையை அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது அவசியம். பொதுவாக உடல்ரீதியான பிரச்னை இருப்பவர்கள், உணவில் கீரைகளைச் சேர்த்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். நார்ச் சத்து நிறைந்து இருப்பதால் கீரையைச் சாப்பிட்டவுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இரும்புச் சத்து உடலில் சேர வேண்டும் எனில், வைட்டமின் சி வேண்டும். எல்லாக் கீரைகளிலுமே வைட்டமின் சி இருக்கும். ஆனால், கீரையை அதிக நேரம் வேகவைப்பதால் வைட்டமின் சி ஆவியாகிவிடும். எனவே, வேகவைத்த கீரை நன்றாக ஆறிய பின், அதில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்தால், கீரையில் உள்ள இரும்புச்சத்தை நம்மால் கிரகித்துக்கொள்ள முடியும். பயிர் செய்யப்படும் விளை நிலங்களைப் பொறுத்து, கீரையின் சத்துக்களும் ருசியும் சிறிது மாறுபடும். கீரையை ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்

முளைக்கீரை

கலோரி, புரதம், மாவுச்சத்தின் அளவு மிகக் குறைவு. கால்சியம், இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது. சோடியம், பொட்டாஷியம், பீட்டா கரோட்டின் ஓரளவு உள்ளது. ஆக்ஸாலிக் ஆசிட் இதில் மிகவும் அதிகம். சிறுநீரகப் பிரச்னை, கல் அடைப்பு, அலர்ஜி இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

சிறுகீரை

கலோரி, புரதம், பாஸ்பரஸ் குறைவான அளவில் உண்டு. ஓரளவுக்கு கால்சியமும் உண்டு. இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. பீட்டா கரோட்டின், நார்ச் சத்துகளும் உண்டு. சிறு பருப்புடன் சிறு கீரை சேர்த்துச் செய்த சமையலை எல்லா வயதினரும் சாப்பிடலாம்.

பாலக்கீரை

கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து குறைந்த அளவே இருந்தாலும் ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் சி மிக அதிகம். மேலும் இதில் ஆக்ஸாலிக் ஆசிட் மற்றும் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். தைமின், ரிபோஃப்ளோமின் மற்றும் நார்ச்சத்து ஓரளவுக்கு இருக்கிறது. பீட்டா கரோட்டின் நிறைந்து இருக்கிறது. வேகவைத்து அரைத்தப் பாலக் கீரையை சப்பாத்திக்கு சைட்-டிஷ்ஷாக வாரம் ஒரு முறை சேர்த்துக்கொள்ளலாம்.
source Vikatan

நடப்பீர்களா நீங்கள்? நலம் தரும் நடை!

நடப்பீர்களா நீங்கள்? நலம் தரும் நடை!


தினசரி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால், ஒரு வருடத்தில் மூன்றரை கிலோ கொழுப்பைக் கரைக்கலாம்.

இதய நோய்கள் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் இதய நோய்க்கான வாய்ப்பை 50 சதவிகிதம் அளவுக்குக் குறைக்கலாம். மேலும், ஆறு புள்ளிகள் வரை ரத்த அழுத்தமும், கெட்ட கொழுப்பும் குறைய உதவுகிறது.

புற்றுநோய் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டப் பெண்கள் வாரத்துக்கு மூன்று முதல் ஐந்து மணி நேரமும், ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் வாரத்துக்கு ஒன்றரை மணி நேரமும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பை 50 சதவிகிதமாக அதிகரிக்கலாம். மன அழுத்தம் நடைப்பயிற்சி செய்வது என்டோஃபின் சுரப்பைத் தூண்டும். இதனால் ரிலாக்சேஷன் ஏற்படுகிறது. மேலும், மனப் பதற்றம் மற்றும் மன அழுத்தத்துக்கான வாய்ப்பும் இதனால் குறையும்.

Source Vikatan

புதினா/ வெந்தயக்கீரை/ முருங்கைக்கீரை

எந்தக் கீரையில் என்ன சத்து? 


புதினா

பீட்டா கரோட்டின், ரிபோ ஃப்ளோமின், ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி மற்றும் கால்சியம், இரும்புச் சத்து, நார்ச்சத்து ஆகியவை இருக்கின்றன. மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம், மாங்கனீஸ், குரோமியம் போன்ற தாது உப்புக்களும் ஓரளவு இருக்கின்றன. துவையல் மற்றும் சட்னி செய்து சாப்பிடலாம். நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். எல்லோருக்கும் ஏற்றது.

வெந்தயக்கீரை

இரும்பு, நார்ச் சத்துக்கள் ஓரளவு இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின் மிகுதியாக இருக்கின்றன. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸும் நிறைய இருக்கிறது. தாது உப்புக்களில் பொட்டாஷியம் குறைந்த அளவும், மெக்னீஷியம், தாமிரம், மாங்கனீஷ், துத்தநாகம், சல்பேட், குளோரைடு ஆகியவை ஓரளவும் இருக்கின்றன. சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்களும் தங்கள் உணவில் இந்தக் கீரையை தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். மிகவும் குளிர்ச்சியைத் தரக்கூடியது. எல்லோருக்கும் ஏற்ற வெந்தயக் கீரையை மசியல் செய்து சாப்பிடலாம்.

முருங்கைக்கீரை

கால்ஷியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. கண்களுக்கு மிகவும் நல்லது. மலச் சிக்கலைத் தீர்க்கும். தாது உப்புக்களான பொட்டாஷியம், தாமிரம், மெக்னீஷியம், குரோமியம், துத்தநாகம் மற்றும் குளோரைடு ஆகியவை ஓரளவு இருப்பதால், உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்புகள் உறுதி பெறும். கூட்டு செய்து சாப்பிட ஏற்றது.
Source Vikatan

எந்தக் கீரையில் என்ன சத்து?


பொன்னாங்கன்னி / அரைக்கீரை / மணத்தக்காளிக்கீரை


பொன்னாங்கன்னி

வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து ஓரளவு உண்டு. கால்சியம், நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் மற்றும் ரிபோ ஃப்ளோமின் நிறைந்தது. மெக்னீஷியம், தாமிரம், மேங்கனீஷ், சல்பர் ஆகியவை ஓரளவு உண்டு. கண்களுக்கு மிகவும் நல்லது. புரதம் மற்றும் கலோரி ஓரளவு உண்டு. வாரம் ஒரு முறை கூட்டு செய்து சாப்பிடலாம்.

அரைக்கீரை

கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்தது. இரும்புச் சத்து அதிகம். ஓரளவு பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச் சத்து இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கவும் ரத்த விருத்திக்கும் பயன்படுகிறது. புரதம் மற்றும் கலோரி மிகக் குறைந்த அளவே இருந்தாலும் இது எல்லோருக்கும் ஏற்றது. அரைக்கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம்.

மணத்தக்காளிக்கீரை

ஓரளவுப் புரதச் சத்தும் இரும்பு, கால்சியம், நார்ச் சத்துக்களும் உண்டு. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் இருப்பதால், வாய்ப் புண்ணைக் குணமாக்கும்

Source Vikatan

காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுத் தாவரங்கள்!

காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுத் தாவரங்கள்!


மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி!

வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...

கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!

சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.

வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.

மலைப் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.

ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.

கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே!
 
Source Vikatan

தண்ணீர்! தண்ணீர்!!

தண்ணீர்! தண்ணீர்!!

ஜீரண சக்திக்கு, உடல் சூட்டை ஒரே சீராக வைக்க, ஹார்மோன் மாற்றத்திற்கு, சருமப் பொலிவுக்கு என உடலுக்கு தண்ணீர் அவசியம். சராசரியாக ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், ஒன்றரை லிட்டர் தண்ணீர் வெளியில் போகும். இந்த நீர்ச் சத்துஉடலுக்குத் தண்ணீர் மூலம் நேரடியாகவும், சாம்பார், ரசம், ஜூஸ், காய்கறிகள், பழங்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற உணவின் மூலமாகவும் உடலில் சேர்ந்துவிடும்.

1. சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1,500 மில்லி அதாவது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அவசியம். ஏழு முதல் எட்டு தம்ளர் வரை அவசியம் தேவை.

2. கோடைக் காலத்தில் சருமத்தின் மூலமாக வியர்வை வெளியேறுவதால், வறட்சி, போன்ற காரணங்களால் தண்ணீரின் தேவை இன்னும் கூடுதலாக மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தேவைப்படும்.

3. விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியாளர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பது நல்லது. வெறும் வயிற்றில் இரண்டு தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

4. சாப்பிட்டவுடன், தொடர்ந்து மருந்து சாப்பிடுபவராக இருந்தால், அரை தம்ளர் முதல் ஒரு தம்ளர் வரை குடிக்கலாம்.

5. காலையில் டிபன் சாப்பிட்டதும், இரண்டு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

6. சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பும் என தண்ணீரை குடிப்பது நல்லது.

7. உணவு உண்ணத் தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்கச் செய்வதற்கான திரவம் சுரக்கத் தொடங்கும். வாயில் உள்ள உமிழ்நீரே உணவை உள்ளே தள்ளப் போதுமானது. கூடுதலாகத் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தும்போது, தண்ணீர் ஜீரணத் திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை மந்தமாக்கும். சாப்பிடும்போது நடுநடுவே தண்ணீர் அருந்தக் கூடாது.

8. அதிக உப்பு, காரம் சேர்த்து சாப்பிடும்போது, தாகத்தைத் தூண்டி அதிக தண்ணீரை கேட்கும். தவிர்ப்பது நல்லது.

9. உணவை வேகமாக சாப்பிடும்போதும் தண்ணீரின் தேவை அதிகரிக்கும். நிதானமாக சாப்பிடப் பழகுங்கள்.

10. நமது உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்திப் பெற்றுக்கொள்ளும். ஒவ்வொருவரின் உடல்வாகு, வசிப்பிடம், மற்றும் வெப்பநிலை நிலை பொறுத்து, தண்ணீரின் தேவை அளவு மாறும்.
Source Vikatan

பளிச் பற்கள் பராமரிப்பு, பளீச் டிப்ஸ்...

பளிச் பற்கள் பராமரிப்பு, பளீச் டிப்ஸ்... 


குழந்தைகள் பிறந்த ஆறு முதல் ஏழு மாதங்களில் பால் பற்கள் வளருவதால், அவர்களுக்கு ஈறு பகுதியில் எரிச்சலாக இருக்கும். அந்த நேரத்தில், பெரும்பாலான குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இந்தப் பால் பற்களின் வளர்ச்சி ஏழாம் வயதில்தான் முடிவடையும். அந்த நேரத்தில் குறைந்தது 20 பற்களாவது 
குழந்தைகளுக்கு முளைத்திருக்க வேண்டும். ஏழாம் வயதின் முடிவில்தான் பால் பற்கள் விழ ஆரம்பித்து நிரந்தரமான பற்களின் வருகை ஆரம்பிக்கும்.

இந்த நேரத்தில் குழந்தைகளின் தாடை மற்றும் பற்களின் வேர் நன்றாகக் கடினமாக ஆரம்பிக்கும்.குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததும், அலட்சியமாக இருக்காமல், பெற்றோர்கள் குழந்தையின் பற்களை தங்கள் விரலால் துலக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

அதோடு, குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக விற்கப்படும் பற்பசையையும், பிரஷையும் வாங்கித் தந்து, அதைப் பயன்படுத்தச் சொல்லி பழக்கவேண்டும். அவர்கள்
பயன்படுத்தும் பற்பசையில் கால்சியம் மற்றும் ஃப்ளூரைடின் அளவும் அதிகமாக இருக்க வேண்டும்.

பல் துலக்கும்போது 20 ஸ்ட்ரோக்கை மீறாமலும், இரண்டு நிமிடங்களுக்கு மேல் மிகாமலும், பல் துலக்கும் பழக்கத்தைச் சொல்லித்தர வேண்டும். குறைந்த நேரத்தில் பல் துலக்கி, அதிக நேரம் வாய் கொப்பளிக்க வேண்டும்.

கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளை, ஒரு வயதிற்குள் அந்தப் பழக்கத்தை மறக்கச் செய்யவேண்டும்.

குழந்தைகளை சாக்லேட் சாப்பிட அதிரடியாகத் தடை போடாமல், சாப்பிடுகிற எண்ணிக்கையை மெதுவாகக் குறைக்க வேண்டும்.

அதிகப்படியான இனிப்பு உண்பதால் சொத்தைப் பல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதுபோன்ற கிருமிகளுக்குப் பல்லை இரையாக்காமல் இருக்க, சாப்பிட்டவுடன் நிறையத் தண்ணீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். அதே நேரத்தில் நிறையத் தண்ணீரும் அருந்த வேண்டும்.

இரவு படுக்கும் முன் பாலில் சர்க்கரைச் சேர்க்காமல் கொடுங்கள். காரணம், சர்க்கரையில் உள்ள இனிப்பு பற்களில் தங்கி, சொத்தைப் பற்களை உருவாக்கிவிடும்.
படுக்கும் முன்பு பல் துலக்குவது அவசியம்.

உணவுகளை மென்று அசைபோட்டுச் சாப்பிடும் பழக்கத்தைச் சொல்லிக் கொடுங்கள். இதனால், கன்னப் பகுதியும் ஒட்டிப் போகாமல் அழகாக இருக்கும்
.
குழந்தைகள் விளையாடும்போது பல் உடைந்து போக வாய்ப்புகள் அதிகம். இதனைத் தவிர்க்க கடுமையான பயிற்சியில் ஈடுபடும்போது, குத்துச் சண்டை விளையாட்டில் பயன்படுத்தும் மௌத் கார்டினைப் பயன்படுத்தச் சொல்லலாம்.

பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம் நிறைந்த உணவு முக்கியம். தினமும் உணவில் கீரை வகைகள், பட்டாணி, சுண்டல், ஆப்பிள், பச்சைக் காய்கறிகள், திணை வகைகள் போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்


Source Vikatan

Sunday, June 22, 2014

Did u Know


2,000 ரூபாயில் ஒரு வீட்டுத் தோட்டம்!

2,000 ரூபாயில் ஒரு வீட்டுத் தோட்டம்!

''காய்கறிகள் விலை விண்ணை முட்டுகிறது. அதை வாங்கினாலும், ரசாயன உரங்களில் விளைந்த அவற்றால் என்னென்ன கேடுகள் வருமோ என்று அஞ்சியே உண்ண வேண்டியுள்ளது. 'ஆர்கானிக்

என்று கடைகளில் விற்கப்படும் காய்கறிகள் வாங்கினால், எந்தளவுக்கு நம்பகமானது என்ற கேள்வி எழுகிறது. இதற்கெல்லாம் தீர்வு... வீட்டில், மாடியில் நாமே தோட்டம் போட்டு காய்கள் வளர்ப்பதுதான். இதற்கு உங்களுக்கு உதவும், எங்களின் இந்த நேச்சர் கேர் ஃபார்மிங் கிட்!'' என்று சிரிக்கிறார்கள், கோவை, பி.எஸ்.ஜி கல்லூரியின் எம்.பி. மாணவர்களான வினோதினி, ஜாஃபர் சாதிக் மற்றும் தினேஷ் சந்திரசேகர். இவர்களின் தயாரிப்பே, இந்த கிட்!

''நம் முன்னோர்களுக்கு 70 வயதில் வந்த நோய்கள் எல்லாம், நமக்கு 30 வயதிலேயே எட்டிப்
பார்க்கின்றன. காரணம், நம் உணவில் கலந்திருக்கும் ரசாயனங்கள். இதற்கு மாற்று வழி, இயற்கை வழி விவசாயம். 'ஆனால், அதை எல்லோரும் செய்ய முடியுமா?' என்கிற தேவையற்ற அச்சம்தான், பலரையும் இயற்கை விவசாயத்திலிருந்து தள்ளி வைத்திருக்கிறது. அந்த அச்சத்தைப் போக்கி, இயற்கை விவசாயம் எளிதானது என்பதை புரிய வைப்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காக நாங்கள் தயாரித்திருக்கும் பொருட்கள் அடங்கியதுதான், இந்த கிட்!'' என்று வினோதினி நிறுத்த,

''தேங்காய் நாரால் ஆன மெத்தை போன்ற அமைப்பு 7 கிலோ, தவிட்டு படுக்கை 7 கிலோ, மண்புழு உரம் 7 கிலோ, இயற்கை விதைகள் (கீரை வகைகள், தக்காளி, கத்திரிக்காய், மிளகாய், வெண்டை, முள்ளங்கி, அவரை, பூசணி, வெள்ளரிக்காய், முருங்கை, பீர்க்கங்காய்) 5 கிராம்கள், விதை படுக்கை, வளர்ப்பு பைகள், வேப்பம் புண்ணாக்கு, மருந்து தெளிப்பான், வேப்பம் எண்ணெய், அமுதகரைசல் ஆகியவற்றோடு கையேடு மற்றும் சில பண்ணைக் கருவிகள் அடங்கியதுதான் இந்த நேச்சர் கேர் ஃபார்மிங் கிட். இதை வாங்குபவர்களுக்கு, தோட்டம் வளர்ப்பதற்கான வழிமுறைகளை இலவசமாகவே கற்றுத்தருகிறோம்!'' என்றார் ஜாஃபர்.
 
மாணவர்கள், விவசாயம் பக்கம் வந்ததன் பின்னணி சொன்னார் தினேஷ். ''மூவருமே எம்.பி.ஏ மார்க்கெட்டிங் படிக்கிறோம். இறுதியாண்டு புராஜெக்ட் பற்றி முதல் ஆண்டிலேயே யோசித்தோம். அதற்காக விவசாயத்தைக் கையில் எடுத்தோம். எங்களுக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் உண்டாகக் காரணம், நம்மாழ்வார் அய்யா. அவர் ஏற்படுத்திய விழிப்பு உணர்வு பிரசாரங்கள்தான் விவசாயத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தியது. உடனே அது தொடர்பாக நிறைய ஆய்வுகள் செய்தோம். அப்போது எங்களுக்கு தோன்றியதுதான் இந்த வீட்டு மற்றும் மாடித்தோட்ட வழிமுறைகள்.
வீட்டுத்தோட்டத்துக்கு முதலில் மண்ணை நன்கு கிளறி, காற்று செல்லும் வகையில் தயார் படுத்தவேண்டும். மாடித்தோட்டத்துக்கு வளர்ப்பு பைகளில் தேங்காய் நார் படுக்கை இடவேண்டும். இது தண்ணீரை நன்கு உறிஞ்சி மண்ணை ஈரப்பதமாக வைத்திருக்கும். அடுத்து அரிசி தவிடு. இதில் பொட்டாசியம், பாஸ்பரஸ், நைட்ரஜன் போன்றவை தேவைக்கதிகமாகவே இருப்பதால், இது சிறந்த இயற்கை உரம்.  மேலும் சூரிய ஒளி நேராக மண்ணில் படாமலும் தடுக்கும். அடுத்து மண்புழு உரம். இது மண்ணை வளப்படுத்துவதோடு மண்புழு மண்ணைக் கிளறிக்கொண்டே இருப்பதால் காற்றோட்டமாகவும் இருக்கும்.
இப்படி மண்ணை தயார் செய்துவிட்டு, விதைகளை இடவேண்டும். வளர்ந்த பிறகு வேப்பெண்ணெய், வேப்பம்புண்ணாக்கு ஆகியவை பூச்சி விரட்டியாக பயன்படுத்தப்படும். அடுத்தது வளர்ச்சி ஊக்கியாக அமுதக் கரைசல் இடவேண்டும். இது, மாட்டுச் சாணம், கோமியம் மற்றும் வெல்லம் கலந்தது. ஒரு லிட்டர் அளவுக்கு இந்தக் கரைசலை தருவதுடன், அதை தயாரிக்கும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துக் கூறுவதால், அடுத்த முறை சுயமாக தயாரித்துக்கொள்ளலாம்'' என்றார் தினேஷ்.
மீண்டும் ஆரம்பித்த வினோதினி, ''நாங்கள் இந்த முறையில் பயிரிட்டு அறுவடை செய்த முதல் விளைச்சல் பயிரான பசலைக்கீரையை உண்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த மகிழ்ச்சியை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்ப்பதே எங்கள் லட்சியம்'' என்றார்.
''தற்போது, இந்த 'கிட்' எங்கள் வீடுகளில் வைத்தே தயாரித்து, கேட்பவர்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கிறோம். எங்களின் கிட், இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விலை 2,000 ரூபாய். ஒரு மாதத்துக்கு காய்கறிகளுக்கு செலவிடும் தொகையை செலவிட்டாலே இதை வாங்க முடியும். இதன் மூலம் விலைமதிப்பில்லா ஆரோக்கியத்தை சேமிக்கலாம். உங்கள் கைகளால் சமைத்த உணவை சாப்பிட்ட அனுபவம் ஏற்கெனவே அனைவருக்கும் இருக்கும். உங்கள் கைகளால் விளைவித்த உணவை உண்ணும் அனுபவத்துக்கு துணை புரிகிறோம் நாங்கள்! எங்களின் இந்த முயற்சிக்கு உதவிய கல்லூரி ஆசிரியர்களுக்கும், குறிப்பாக ஆசிரியர் நாச்சிமுத்துவுக்கும் நன்றி '' என்றனர் கோரஸாக.
- அவள் விகடனிலிருந்து...

படிக்கலாம்... பறக்கலாம்..

படிக்கலாம்... பறக்கலாம்... பணம் பார்க்கலாம்... உண்மை என்ன?

''குறைந்த கட்டணம், படிக்கும்போதே பார்ட் டைம் வேலை, ஃபாரினில் வேலை என்றெல்லாம் விளம்பரங்கள் குவிகின்றன. இதையெல்லாம் பார்த்து, இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களில் என் மகளை சேர்க்கலாம் என நினைக்கிறேன். ஆனால், இதெல்லாம் உண்மையாக நடக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் உங்களால் உதவ முடியுமா?'' என்று ஒரு வாசகி தொலைபேசி மூலமாக நம்மிடம் வேண்டுகோள் வைத்தார்.
இதையடுத்து, இப்படிப்பட்ட கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவிகள் சிலரிடம் பேசியபோது... விளம்பரங்களில் சொல்லப்படும் எந்த அம்சமும் அந்தக் கல்வி நிறுவனங்களில் இல்லை என்பதுடன், மாணவர்களைக் காசு கொட்டும் பகடைக்காய்களாக உபயோகிக்கிறார்கள் என்கிற அதிர்ச்சித் தகவலும் தெரிந்தது.
''ஐ.டி.ஐ-யில படிச்சுட்டு வேலை தேடிட்டிருந்தேன். அண்ணன்தான் விளம்பரத்தைப் பார்த்துட்டு, 'பேசாம இந்த இன்ஸ்டிட்யூட்ல படி, அவங்களே வேலை பார்த்து வெச்சுடறாங்களாம்’னு சொன்னாரு. கடனை ஒடனை வாங்கி படிக்க வெச்சுட்டா, வெளிநாட்டுல வேலை, கை நெறைய சம்பாதிக்கலாம்னு எங்கப்பாவும் சேர்த்துவிட்டாரு. ஆனா, இங்க அடிப்படையான கோச்சிங்கே சரியில்ல. வெளிநாட்டுல வேலை செய்யணும்னா ஸ்போக்கன் இங்கிலீஷ், ஃபிரெஞ்ச் இதெல்லாம் படிக்கணும்னு சொன்னாங்க. ஆனா, நிரந்தரமான லெக்சரர்கள் இல்லாம, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் வந்து வகுப்பெடுக்கறாங்க. எங்க வீட்ல இருக்கிறவங்க, 'பொண்ணு இன்னும் ஒரு மாசத்துல படிப்பு முடிச்சு, வெளிநாட்டு வேலைக்குப் போய், கடனை அடைச்சுடுவா’னு நம்பிக்கையோட இருக்காங்க. ஆனா, உள்ளூர்லகூட வேலை பார்க்க முடியும்னு எனக்கு தோணல'' என்று பரிதாபமாகச் சொன்னார் ஒரு மாணவி.
''அண்ணா யுனிவர்சிட்டி, மெட்ராஸ் யுனிவர்சிட்டியில சேர்றதுக்குகூட, நேரா போனோமா, அப்ளிகேஷன் வாங்கி விண்ணப்பிச்சோமானு வந்துட்டே இருக்கலாம். இந்தக் கல்வி நிறுவனங்கள்ல, கோர்ஸ் டீடெயில் விசாரிக்கக்கூட கன்சல்டிங் ஃபீஸ்னு சொல்லி 2,000 ரூபாய் வாங்கிட்டுதான் அப்ளிகேஷனே கொடுக்கறாங்க. ஸீட் கிடைக்கலைனா... அது காந்தி கணக்குதான்'' என்று அதிரவைத்த மற்றொரு மாணவி,
''நாங்க படிக்கிற துறை சார்ந்த நிறுவனத்துக்கு, எங்களை டிரெயினியா அனுப்புறாங்க. இன்ஸ்டிட்யூட்லதான் ஒழுங்கான கோச்சிங் இல்ல, டிரெயினிங் போயாச்சும் கத்துக்கலாம்னு பார்த்தா, அங்க எடுபிடி வேலைக்குதான் பயன்படுத்துறாங்க. டிகிரி வாங்கணுமேனு பொறுத்துட்டு இருக்கோம். ஒருவேளை வெளிநாட்டுக் கம்பெனியோட இன்டர்வியூல தேர்வாகிட்டா, 'வேலை மட்டுமில்லாம பாஸ்போர்ட்ல இருந்து ஃபிளைட் டிக்கெட் வரைக்கும் நாங்களே ரெடி பண்ணி தந்துடுவோம்'னு சொல்றவங்க, அதுக்கான செலவுக்கு லட்சக்கணக்குல கறந்துடறாங்க. இப்படி காசு கொடுத்து வேலைக்குப் போனாலும், ஒரு வருஷம் டிரெயினியாதான் போவோம். அதுக்கப்புறம் கம்பெனி இஷ்டப்பட்டா வேலையைத் தொடர முடியும். இல்லைனா பையைத் தூக்கிட்டு ஊரைப் பார்க்க வந்துட வேண்டியதுதான்'' என்றார் புலம்பலுடன்.
இவையெல்லாவற்றையும்விட, அந்தக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வைத்தே கமிஷன் பார்க்கும் வழிகள், தலைசுற்ற வைக்கின்றன. ஒரு கம்பெனிக்கு, 10 மாணவர்களை டிரெயினியாக அனுப்பும் போது, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத் துக்கு ஒரு கமிஷன் கிடைக்கும். கம் பெனிக்கோ... 'டிரெயினி’ எனும் பெயரில் குறைந்த சம்பளத்துக்கு ஆள் கிடைத்து விடும். பயிற்சி முடிந்ததும் நிரந்தர வேலை கொடுத்தால் சம்பளம் அதிகமாக தரவேண்டும் என்பதற்காக, 'உங்க வேலையில் எங்களுக்குத் திருப்தி இல்லை’ என்று சொல்லி, அந்த பத்து பேரையும் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். மறுபடியும் இதே கமிஷன் முறையில் புதிதாக 10 பேரை டிரெயினி எனும் பெயரில் சேர்த்துக்கொள்வார்கள்.
பெற்றோர்களே... பிள்ளைகளே உஷார்!
'அரசாங்கம்தான் காப்பாற்ற வேண்டும்!’
இதுபோன்ற கல்வி நிறுவனங்களைப் பற்றிப் பேசும் பேராசிரியை சரஸ்வதி, ''முன்பெல்லாம், கல்வி நிறுவனங்கள் விளம்பரம் செய்யக்கூடாது என சட்டமே இருந்தது. ஆனால், சுயநிதிக் கல்லூரிகள் முளைக்க ஆரம்பித்தவுடன், விளம்பரங்கள் சர்வ சாதாரணமாக வர ஆரம்பித்துவிட்டன. இதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருந்தாலும், இடம் கிடைத்தால் போதும் என பணத்தைக் கொட்டி ஏமாறுகிறார்கள். அரசாங்க தலையீட்டால் மட்டும்தான் இதைத் தடுத்து நிறுத்த முடியும்'' என ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
இதுபோன்ற நிறுவனங்களிடம் ஏமாறாமல் இருப்பது பற்றி பேசிய சென்னை, வழக்கறிஞர் ரமேஷ், ''ஒரு கல்வி நிறுவனத்தில் சேரும் முன்பு, அந்தக் கல்வி நிறுவனத்தில் கற்பிக்கப்படும் துறையைச் சார்ந்த அரசாங்க நிறுவனத்தின், அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.
உங்களுக்கு கொடுக்கப்படும் உத்தரவாதங்கள் பேப்பரில் இருப்பதுடன், அதன் ஒரு நகல் உங்களிடமும் இருக்க வேண்டும். ஒப்பந்தத்தில் இல்லாமல் கூடுதலாக, பணம் கேட்டு மிரட்டினாலோ, பணம் கட்டி ஏமாந்துவிட்டாலோ, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன.
வெளிநாடுகளில் வேலை என விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள், இதற்கென மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். வெளிநாடுகளில் வேலைக்கு அனுப்பப்படும் நபர், ஸ்டூடென்ட் விசாவிலோ அல்லது டூரிஸ்டு விசாவிலோ அனுப்பப்படுவது சட்டத்துக்குப் புறம்பானது. அதோடு வொர்க் பெர்மிட் இருந்தால்தான் வெளிநாடுகளில் வேலை செய்யமுடியும். இதைஎல்லாம் தெளிவாகத் தெரிந்துகொண்டு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் சேர்வது நல்லது'' என்று அக்கறையுடன் சொன்னார்.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!
இதுபோன்ற கல்வி நிறுவனம் ஒன்றின் வெளியூர் கிளையில், நடக்கும் ஒரு கூத்து.... இந்த நிறுவனத்தில் சேர்வதற்காக வரும் மாணவர்களை 'கன்சல்டிங்' என்கிற பெயரில் 2 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஓர் அறையில் உட்கார வைக்கிறார்கள். அங்கே, ஏர்ஹோஸ்டஸ் மாதிரி ஆடை அணிந்திருக்கும் ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகிறார்கள். அடுத்து, தலையை இறுக்க பின்னி, முகத்தில் எண்ணெய் வழியும் கோலத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனைவரிடமும் கொடுக்கிறார்கள். அதன்பிறகு, 'போட்டோவுல இருக்கற பொண்ணுதான், உங்க முன்ன நிக்கறாங்க. எங்க இன்ஸ்டிட்யூட்ல படிச்சதாலதான், இப்போ வெளிநாட்டுல, நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்காங்க' என்று சொல்லி, அனைவரையும் வாய்பிளக்க வைக்கிறார்கள்.
ஆனால், இதே பெண்தான் தினம் தினம் இப்படி நடக்கும் 'கன்சல்டிங்'கில் ஆஜராகிறார் என்பதுதான் கூத்தே!
Vikatan

சோலார் பம்பு செட்

சோலார் பம்பு செட் அமைக்க 80% மானியம்: தமிழக அரசு

சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளதுதங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.
ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளதுஇந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.
தவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனமதெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதுஇதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான ஆதாரங்களுடன் வேளாண்மை துறைதோட்டக்கலை துறைஅல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுக வேண்டும்அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.
மின்வெட்டு பிரச்னையிலிருந்து இனி விவசாயயிகளுக்கு விடுதலைதான்.

கூடுதல் தகவல்களுக்கு:
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone - 044 - 2435 2686, 044- 2435 2622
email : aedce.tn@nic.in
http://www.aed.tn.gov.in

கிரீன் டீ

கிரீன் டீ ஆரோக்கியத்துக்கான “கிரீன்” சிக்னல்!

ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது
கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் நம் உடலில் உள்ள திசுக்களில் நடக்கும் ரசாயன மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கிறது. இதன் மூலம், வயதாகும் செயல்பாட்டைத்தாமதப்படுத்தி, வாழ்க்கையை நீட்டிக்கிறது.
புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும்
வைட்டமின் சி-யைக் காட்டிலும், இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் 100 மடங்கு புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடியது. இதன் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது.
 உடல் எடை குறையும்
உடலில் உள்ள கொழுப்பு செல்களை எரித்து, உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளை இயற்கையான முறையில் விரைவுபடுத்துகிறது. தோராயமாக நாள் ஒன்றுக்கு 70 கலோரி வரை இதன் மூலம் எரிக்கலாம்.
உயர் ரத்த அழுத்தம் குறையும்
கிரீன் டீ-யில் உள்ள ரசாயனங்கள் உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தையும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இதயநோய் வரும் வாய்ப்பு குறையும்
கிரீன் டீ குடிப்பவர்களுக்கு, உடலில் கொழுப்புக் குறைந்து, இதய நோய்க்கான வாய்ப்பு 31 சதவிகிதமாகக் குறைகிறது. மாரடைப்புக்குப் பிறகு செல்கள் இறப்பதைத் தவிர்த்து, இதய செல்கள் வளர்ச்சியை விரைவுபடுத்துகிறது. ரத்தம் உறைவதைத் தடுக்கிறது.

உணவு நஞ்சாவதைத் தடுக்கும்
பாக்டீரியா கிருமிக்கு எதிராகச் செயல்படும். பாக்டீரியா கிருமியால், உணவு நஞ்சாவது (ஃபுட் பாய்சனிங்) தடுக்கப்படுகிறது. வயிற்றில் கெடுதலை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுத்து, நன்மை செய்யும் பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதேபோல், வைரஸ் கிருமித் தொற்றையும் தடுக்கிறது.
எலும்புகளுக்கு வலு சேர்க்கும்
கிரீன் டீ-யில் அதிக அளவு ஃப்ளோரைட் உள்ளதால், எலும்புகள் உறுதிப்படும். தினமும் கிரீன் டீ பருகுவதன் மூலம், எலும்பின் அடர்த்தி பாதுகாப்பாக இருக்கிறது.
 
மன அழுத்தம் நீங்கும்
எல்-தினைன் (L-theanine) என்ற அமினோ அமிலம் இதில் உள்ளது. மன அழுத்தம், பதற்றத்தைப் போக்க இது உதவுகிறது. மேலும், டோபோமைன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதில் காபியைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவே காஃபைன் உள்ளதால், உடனடி புத்துணர்வைத் தந்து, மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்
கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் மற்றும் ஃபிளவனாய்ட் என்ற ரசாயனங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய்க் கிருமித் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
கிரீன் டீ ரெடி:
கிரீன் டீ தூளாகவும், ஒரு கப் தேநீர் தயாரிக்கும் வகையில் பாக்கெட் வடிவிலும் கிடைக்கும். அருந்தும்போது சாதாரண தேநீர் போலச் சுவையாக இல்லாவிட்டாலும், மிகவும் ஆரோக்கியமானது என்பதால் இதைத் தினமும் பருகுவது நல்லது.
கிரீன் டீ தயாரிக்க 80 முதல் 85 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை போதுமானது. நீரை நன்றாகச் சுடவைக்கவும். அதில் ஒரு டீஸ்பூன் கிரீன் டீ சேர்த்து, நன்றாக கொதிநிலைக்குக் கொண்டுசெல்லவும். ஆனால் கொதிக்கவிடக் கூடாது. தேயிலையின் சாறு நீரில் இறங்க ஒரு சில நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பிறகு, வடிகட்டி அப்படியே அருந்தலாம்.
பால் சேர்க்கவே கூடாது. சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது. சர்க்கரைக்குப் பதில் சிறிது தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
- பா.பிரவீன் குமார்
-டாக்டர் விகடனிலிருந்து...