Saturday, July 13, 2019

வாத்துவளர்ப்பு_முறை

#வாத்துவளர்ப்பு_முறை

காக்கி கேம்பல், இண்டியன் ரன்னர் வகையான வாத்துகள் முட்டைக்காக வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு 250 முதல் 300 முட்டைகள் வரை வாத்து இடும்.

செர்ரி வெல்லி என்பது வீரிய கலப்பின வாத்து ஆகும். இவற்றை வளர்க்க மேய்ச்சல் நிலம் மட்டும் போதாது. இவ்வகையான வாத்துகளுக்கு அடர் தீவனமும், போதிய பாதுகாப்பான பண்ணை வீடுகளும் அவசியம்.

மஸ்கவி, வெள்ளை பெக்கின், ரூவன் ஆகியவை இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை ஆகும்.

இதில் கூஸ் வாத்து வகைகள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. சைனீஸ், எம்டன், ஆப்ரிக்கன், ரஸ்யன், டொலூஸ் ஆகிய இரகங்கள் உள்ளன.

#வீட்டுமேலாண்மை...

#கொட்டகைஅமைப்பு

இதற்கென தனியாக கொட்டகை அமைக்க வேண்டிய அவசியமில்லை. கோழி கொட்டகை இருந்தால் அதுவே போதுமானது. இல்லையேல் சிறிய கொட்டாரம் அமைத்துக்கொள்ளலாம்.

வனவிலங்குகள் மற்றும் தெருநாய்களிடமிருந்து பாதுகாக்க வளரும் இடத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும்.

புறக்கடையில் வளர்க்கப்படும் வாத்துக்களுக்கு கொட்டகை எதுவும் தேவைப்படாது.

#தீவனமேலாண்மை

வாத்துகளுக்கென்று தனிப் பராமரிப்பு எதுவும் தேவையில்லை. கோழிகளுக்குக் கொடுக்கும் அதே தீவனங்கள் போதுமானவை. மேலும் வாத்துகள் கோழிகளை விட அதிகளவில் களைச் செடிகளை மேய்ந்து விடுகின்றன.

புறக்கடையில் வளர்ப்பவர்களுக்கு களை எடுக்கும் வேலை குறைகிறது. ஆனால் சரியான அளவு உணவு எடுத்துக்கொண்டால் மட்டுமே நன்கு வளரும். இதில் இறைச்சி வாத்துகள் 7 வாரத்தில் குறைந்தபட்சம் 2.2 முதல் 2.5 கிலோ வரை வளரக்கூடியது.

முட்டை வாத்துகளுக்கு முதல் 20 வாரத்திற்கு, 12.5 கிலோ தீவனம் தேவைப்படும். ஒரு நாளைக்கு 120 முதல் 170 கிராம் தீவனம் என்ற கணக்கில் ஒராண்டிற்கு தோராயமாக 60 கிலோ வரை தீவனம் தேவைப்படும்.

மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் வாத்துகள் அறுவடை செய்த நிலங்களில் உள்ள உதிரி தானியங்கள், புழு, பூச்சிகள், நத்தைகளை உண்டு வாழ்கின்றன. இவ்வகையான தீவனம் அதிக முட்டையிடுவதற்கு போதுமானதாக இருக்காது.

ஆகவே மேய்ச்சலில் விடுவதற்கு முன்பாகவும் மேய்ச்சலில் இருந்து வந்த பின்பும் கூடுதலாக நெல் போன்ற தானியங்களையோ அல்லது வாத்துகளுக்கென்று தயாரிக்கப்பட்ட தீவனங்களையோ கொடுக்க வேண்டும்.

இனப்பெருக்க மேலாண்மை

6-8 வார வயதான ஆண், பெண் வாத்துகளை இனச்சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல இனச்சேர்க்கைக்கு ஆண் வாத்துகள் பெண் வாத்துக்களை விட 4-5 வாரங்கள் வயது முதிர்ந்தவையாக இருக்க வேண்டும்.

#அடைகாத்தல்

அடைக்காப்புக் காலம் 28 நாட்கள் ஆகும். 6-8 வாரத்திற்குட்பட்ட வாத்துகள் இட்ட முட்டைகளையே குஞ்சு பொரிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். ஆண், பெண் வாத்துகளை இனச்சேர்க்கைக்கு விட்ட 10 நாட்களுக்குப் பின்பு முட்டைகள் சேகரிக்கத் தொடங்கலாம்.

அழுக்கான முட்டைகளை கழுவிப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கழுவுவதற்கு 27 டிகிரி செல்சியஸ் சூடான நீரில் கிருமிநாசினி கலந்து கழுவி உடனே உலரவைக்க வேண்டும். இல்லையெனில் முட்டை அழுகிவிட வாய்ப்புள்ளது.

வாத்துக் குஞ்சுகள்

காக்கி கேம்பெல் குஞ்சுகளுக்கு வெப்ப மூட்டும் காலம் 3-4 வாரங்கள். இறைச்சிவகை வாத்துக் குஞ்சுகளுக்கு 2-3 வாரங்கள் போதுமானது. அடைப்பானுக்குள் இடவசதி 90-100 ச.செ.மீ அளவு ஒவ்வொரு குஞ்சுகளுக்கும் அளிக்கப்படவேண்டும். 29-32 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை முதல் வாரத்தில் அளித்தல் அவசியம். பின்பு இது வாரத்திற்கு 3 டிகிரி செல்சியஸ் என்று 24 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்கப்படுகிறது.

#சுகாதாரமேலாண்மை

வாத்துக்கள் இருக்கும் கொட்டகையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு பராமரிப்பதால் நோய் தாக்கும் அபாயம் குறையும் வாய்ப்பு உள்ளது. நாய், பூனைகள் போன்றவைகளிடம் இருந்து வாத்துக்களை பாதுகாக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

#குடற்புழுநீக்கம்

அதிக முட்டை இடுவதற்கு குடற்புழு நீக்கம் முக்கியமானது. வாத்துகளை தட்டைப்புழு, உருண்டைப்புழு, நாடாப்புழு தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் முட்டை உற்பத்தி திறன் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே, 2 முதல் 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் அவசியம் செய்ய வேண்டும்.

வாத்து காலரா, வாத்து பிளேக்

இந்த நோய்களிலிருந்து வாத்துகளை பாதுகாப்பதற்கு தடுப்பூசி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். வாத்து காலராவிற்கு 3 முதல் 4 வாரத்திற்குள்ளும், வாத்து பிளேக்கிற்கு 8 முதல் 12 வாரத்திற்குள்ளும் தடுப்பூசி போட வேண்டும்.

#கல்லீரல்அழற்சி

2-3 வார வயதுடைய வாத்துக் குஞ்சுகளையே இந்நோய் அதிகம் பாதிக்கிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை கிடையாது. இனச்சேர்க்கைக்கு ஈடுபடும் வாத்துகளுக்கு வீரியம் குறைக்கப்பட்ட வைரஸ் தடுப்பூசிகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்ட வேண்டும். இதனை முட்டை உற்பத்தியைத் தொடங்கும் முன்பு செய்ய வேண்டும். ஒரு நாள் வயதான வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த வீரியம் குறைக்கப்பட்ட தடுப்பூசிகள் அளிப்பது நல்ல பயனை தரும்.

#விற்பனை

இதன் முட்டைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இறைச்சி வாத்துக்களை வளர்ந்தவுடன் சரியான பருவத்தில் விற்பனை செய்ய வேண்டும். ஒரு வாரம் வயதுடைய வாத்து குஞ்சு ஒன்று 20 ரூபாய்க்கும், மூன்று முதல் நான்கு மாதம் வளர்ந்த வாத்து ஒரு ஜோடி, 250 முதல் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யலாம்.

இங்ஙனம்
உழவர் குடி

No comments:

Post a Comment