Sunday, November 9, 2014

முடிஉதிர்வைத் தடுக்கும் முக்கிய ஆலோசனைகள்!





னைத்துத் தரப்பினரையும் தீவிர மனஉளைச்சலுக்கு ஆளாக்கக்கூடிய பிரச்னை, 'முடிஉதிர்தல்’. சமீப காலமாக, இளம் வயதினருக்கு முடிஉதிர்தல் பிரச்னை அதிகரித்துவருகிறது என்கிறது ஓர் ஆய்வு. 'ஈஸி ரிலாக்ஸ் டிப்ஸ் மூலம் பெண்களின் முடிஉதிர்வைத் தவிர்க்கலாம்...’ என்று நம்பிக்கை தருகிறார் புதுச்சேரி அரசு மருத்துவமனையின் தோல் மருத்துவர் உதயசங்கர்.
இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
பயோட்டின் துத்தநாகம் அவசியம்
கேரட், வெங்காயம், காலிஃப்ளவர், பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, ஆட்டுப் பால், மாட்டுப் பால் போன்ற பலவற்றில் பயோட்டின் அளவு அதிகம் இருக்கும். இந்த பயோட்டின், முடியை அடர்த்தியாக்கும். பயோட்டின் அளவு உடலில் குறையும்போது, முடியின் அடர்த்தி குறைந்து வலுவிழந்து உடைந்துவிடுகிறது. பயோட்டின் நிறைந்த உணவுகளைஎடுத்துக்கொண்டால், முடிஉதிர்தல் பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம். முடி வளர்ச்சிக்கு, துத்தநாகம் அவசியம் என்பதால், துத்தநாகம் அதிகம் உள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
முடியை இம்சிக்காதீர்கள்
இளம் பெண்கள் தங்கள் ஆரோக்கியமான முடியை ஹேர் ஸ்ட்ரைட்டனிங், கலரிங், ப்ளீச்சிங் மூலம் அவர்களே கெடுத்துக் கொள்கிறார்கள். இதனால் முடியின் இயற்கை அழகு முற்றிலுமாக மறைகிறது. முடி ஆரோக்கியமாக இருக்க இதுபோன்ற தொழில் நுட்பங்களைத் தவிர்ப்பது நல்லது. அவசியம் இல்லாமல் உடல் எடைக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, டயட் என்ற பெயரில் உடலை வருத்தினாலோ முடி உதிர்தல் கண்டிப்பாக இருக்கும்.
மனஉளைச்சல் கேசத்தைப் பாதிக்கும்
'முடி உதிர்கிறதே’ என்று மனஉளைச்சலுக்கு ஆளாகும்போது, இன்னும் உங்கள் பளு கூடிக் கொண்டேபோகும். இதனால் முடியின் வளர்ச்சி கண்டிப்பாகப் பாதிப்புக்கு உள்ளாகும். எதையும் 'டேக் இட் ஈஸி’ என எடுத்துக்கொள்ளுங்கள். யோகா மற்றும் தியானம் என மனதை நிதானிக்கும் விஷயங்களில் ஈடுபடலாம். மனஉளைச்சலிலிருந்து விடுபட்டாலே, இழந்த முடியைத் திரும்பப் பெற முடியும்.
பராமரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
முடியின் ஆரோக்கியத்தில் எவ்வளவு அக்கறை காட்டுகிறோமோ, அதனைப் பராமரிப்பதிலும் காட்ட வேண்டும். வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தரமான ஷாம்பூ போட்டு முடியைச் சுத்தப்படுத்துதல் வேண்டும். அகண்ட பற்களைக்கொண்ட சீப்புகள் பயன்படுத்துவது நல்லது. ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தி முடிச்சிக்கலைத் தவிர்க்கலாம். வெயிலில் செல்வோர் 'சிங்க் ஆக்ஸைட் கண்டிஷனர்’ பயன்படுத்துவதால், முடியைச் செழுமையாக்கலாம். இரவு படுப்பதற்கு முன் முடியைச் சுத்தப்படுத்துவது நல்லது. ஈரம் மற்றும் அழுக்குத் தலையோடு படுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
 
செய்யக்கூடாதவை:
ஹேர் டிரையர் கண்டிப் பாகப் பயன்படுத்தக் கூடாது. இறுக்கமாக ஜடை பின்னுதல், ஹேர் க்ளிப் பயன்படுத்துதல் தவிர்க்க வேண்டும். முடி ஈரமாக இருக்கும்போது, தலை சீவுதல் கூடாது. தலைக்குக் குளித்து முடித்தவுடன் உடனே துணியால் துவட் டாமல், தலையைச் சுற்றித் துணியைக் கட்டிக்கொண்டு ஈரம் நன்கு உறிஞ்சிய பிறகு முடியை உலர்த்த வேண்டும்.
அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால், தலைமுடிக்குச் செல்ல வேண்டிய சத்துக்கள் சரியாகச் செல்லாமல் முடி வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும். புகைப்பதனால் ரத்த ஓட்டம் குறைந்து, முடியின் வேரை வலுவிழக்கவைக்கும். ரத்த ஓட்டம் குறைந்தாலே, முடிகள் உதிர ஆரம்பிக்கும். மது மற்றும் புகையைத் தவிர்ப்பது நல்லது.
மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?
நாள் ஒன்றுக்கு 100 முடிகளுக்கு மேல் உதிர ஆரம்பித்தாலோ, வட்ட வடிவில் திட்டுத் திட்டாய் முடி உதிர்ந்தாலோ, மருத்துவரை அணுகுவது நல்லது. நடுவகிடு விரிவடைந்து மண்டை தெரிதல், முன்மண்டையில் முடிஉதிர்தல், முடியின் நிறம் பழுப்படைந்து எளிதாக உடைதல், முடியின் அடர்த்தி குறைதல், உள்மண்டை வெளியே தெரிதல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக, தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.

No comments:

Post a Comment