Thursday, July 24, 2014

குறைந்த செலவில் இன்டீரியர் டெக்கரேஷன் செய்யலாம்!

interior decoration can low cost!
நடுத்தர வர்க்க வீடு  அல்லது பணக்காரர்களின் பங்களா அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களில் மட்டுமே இன்டீரியர் டெக்கரேஷன் சாத்தியம் என்று  நினைக்கிறோம். ஆனால், மத்தியதர வர்க்க மக்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப் பிலும்; ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு பெட்ரூம் கொண்ட  வீடுகளிலும் கூட உள் அலங்காரம் சாத்தியம்... இதையும் குறைந்த விலையில் செய்யலாம் என்கிறார் ராதா பிரபு. அடிப்படையில் ஓவிய ரான இவர்,  இப்போது சாதாரண மக்களின் இன்டீரியர் டெக்கரேட்டராக வலம் வருகிறார். 

‘‘பிறந்தது வளர்ந்தது படிச்சது எல்லாம் தஞ்சாவூரில். சின்ன வயசுலேந்தே எனக்கு ஓவியம் மேல ஈடுபாடு உண்டு. படிப்பா, ஓவியமான்னு கேட்டா  கொஞ்சம் கூட யோசிக்காம ஓவியம்னு சொல்வேன். அந்தளவுக்கு எனக்கு வரைய பிடிக்கும். இத்தனைக்கும் என் அப்பா, அம்மா எல்லாம் பிரபல  ஓவியர்கள் கிடையாது. ஆனா, அப்பாவும் பெரியப்பாவும் அழகா வரைவாங்க. அம்மா பிரமாதமா கோலம் போடுவாங்க. இதனாலயே வண்ணங்கள் மேல  எனக்கு ஈர்ப்பு வர ஆரம்பிச்சது.

கல்லூரி படிக்கிறப்ப எல்லா கல்லூரி ஆண்டு மலர்லயும் என்னோட ஓவியம் இடம்பெறும். ஆனா, ஓவியப் போட்டிகள்ல கலந்துக்கணும்னு நினைச்சது  கிடையாது. பார்க்கிற பொருட்களை எல்லாம் வரைஞ்சு பார்ப்பேன். பொழுதுபோக்காவும் இதுவே இருந்ததால எந்நேரமும் பேப்பரும் பிரெஷ்ஷுமா  இருப்பேன். எங்கயாவது பக்கத்துல ஓவியப் பயிற்சி முகாம் நடந்ததுன்னா அதுல கலந்துப்பேன்.கல்லூரி படிப்பு முடிச்சதும் ஒரு நிறுவனத்துல  வேலைக்காக விண்ணப்பிச்சேன். நேர்முகத்  தேர்வுக்கு அழைப்பு வந்தது. அப்பதான் என் தோழியோட அப்பா தஞ்சாவூர் பெயின்டிங்ஸ் பயிற்சி  அளிக்கறது தெரிய வந்தது. உடனே மனசுல மின்னல் அடிச்சது. 

பாரம்பரியமான அந்த ஓவியத்தை கத்துக்க முடிவு செஞ்சு அவர் முன்னால போய் நின்னேன். ஆனா, ‘ஒரே நேரத்துல வேலையும் பார்த்துகிட்டு,  தஞ்சாவூர் பெயின்டிங்ஸும் கத்துக்க முடியாது. அதனால ரெண்டுல ஒன்றை தேர்வு செய்’ன்னு அவர் சொல்லிட்டார். நான்தான் ஓவியப்  பைத்தியமாச்சே? அதனால வேலைக்கு குட் பை சொல்லிட்டேன்...’’ என்று சிரிக்கும் ராதா பிரபு, தஞ்சாவூர் ஓவியம் குறித்து பெல்லோஷிப் மற்றும்  டாக்குமென்டேஷன் செய்துள்ளார்.

‘‘நம்ம பாரம்பரிய ஓவியங்கள் பத்தி எந்தவிதமான பதிவுகளும் இல்லை. குறிப்பா தஞ்சாவூர் ஓவியங்கள். அதனால கோயில் சிற்பங்கள், கோயில்  ஓவியங்களை வைச்சுத்தான் இதை வரைவோம். இது தொண்டைல சிக்கின முள் மாதிரி உறுத்திகிட்டே இருந்தது. அதனால வருங்கால  தலைமுறைக்காக தஞ்சாவூர் பெயின்டிங்ஸ் பத்தி ஒரு டாக்குமென்டேஷன் பதிவு செய்தேன். அதுக்காக தமிழ்நாடு ஓவிய நுண்கலை குழு சார்பா  எனக்கு விருதும் கிடைச்சது. பழங்கால ஓவியங்களை அப்படியே புதுப்பிக்கறதுதான் என் ஸ்டைல். அதனால அதுல முழு கவனமும் செலுத்தறேன்...’’  என்றவர் சென்னைக்கு வந்தபிறகுதான் இன்டீரியர் டெக்கரேஷன் செய்ய ஆரம்பித்துள்ளார். 

‘‘எனக்கு ஓவியம், வண்ணங்கள் மேல ஈடுபாடு இருக்கறதால வீட்டையும் எப்படி அழகா வைச்சுக்கலாம்னு யோசிப்பேன். அதன் விளைவா என்  வீட்டையும் மாற்றி அமைச்சேன். ஹால் சுவத்துல அழகான வண்ணம் தீட்டி, ஒரு பூவை வரைஞ்சேன். இதைப் பார்த்த என் தோழி தன்னோட  ஸ்கூலை அழகுப்படுத்தி கொடுக்கச் சொன்னா. அங்க இருந்த ஐந்து அறைகள்லயும் வண்ணம் தீட்டி கொடுத்தேன். ஒவ்வொரு அறைக்கும் ஒரு தீம்.  இதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்புறம் ஒரு பிரபல மருத்துவமனையோட பல் க்ளினிக்குக்கு உள் அலங்காரம் செஞ்சேன். 

என் கணவர் பிரபு என் வேலைகளுக்கு துணையா இருக்கார். அவர் ஒரு பிரபலமான புகைப்படக் கலைஞர். ‘பிரபு காளிதாஸ்’ என்கிற பேர்ல போட்டோ  எடுக்கிறார். அவரோட ஷார்ப்பான விமர்சனமும் ஐடியாக்களும் எனக்கு உதவியா இருக்கு...’’ என்றவர் வீட்டில் அதிக பொருட்கள் இல்லாமல்  இருந்தால்தான் பார்க்க அழகாக இருக்கும் என்கிறார்.  ‘‘இன்னிக்கி பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புலதான் வசிக்கிறோம். குருவிக் கூடு  மாதிரிதான் வீடு இருக்கும். அதுக்குள்ள நிறைய பொருட்களை நிரப்பிடறோம். 

இதுல பலது நமக்கு பயன்படாதது. ஆனாலும் ‘பார்க்க நல்லா இருக்கு’ன்னு வாங்கி குவிச்சுடுவோம். இப்படி இல்லாம அவசியமான பொருட்களை  மட்டும் வீட்ல வைச்சுகிட்டா போதும். பார்க்கவே அழகா இருக்கும். சுத்தம் செய்யறதும் ஈசி. இப்ப சென்னை மாதிரி மாநகரங்களும் சரி, சிறு  நகரங்களும் சரி... தூசியாதான் இருக்கு. இதையும் கருத்துல வைச்சுத்தான் பொருட்களை வாங்கணும்.  ரொம்ப எளிமையான விஷயம், வரவேற்பறை.  அதாவது, ஹால். இதை கவர்ச்சியா வைச்சுகிட்டாலே வீடு அழகா தெரியும். 

ஹால்ல இருக்கிற ஒரு சுவர்ல மட்டும் வண்ணம் தீட்டறது இப்ப ஃபேஷனா இருக்கு. இதுக்கு முன்னாடி ஒரு அறையை மட்டும் அடர் நிறத்துல  பெயின்ட் அடிச்சு அழகாக்குவாங்க. இப்படி செஞ்சா விளக்கு வெளிச்சத்துல அந்த அறை இருட்டாவும், பார்க்க சின்னதாவும் தெரியும். இந்தக் குறையை  போக்கத்தான் இப்ப ஒரு பக்கம் மட்டும் பளிச்சுன்னு வண்ணம் தீட்டறோம். மத்த மூன்று பக்கத்துலயும் வெளிர் நிறங்களை அடிக்கலாம். இப்படி  செய்யும்போது ஹால் பளிச்சுன்னு தெரியும். அதோட பெரியதாவும் தோற்றமளிக்கும்.

இன்னிக்கி சுவர் போஸ்டர்கள் மார்க்கெட்டுல கிடைக்குது. செங்கல், கருங்கல், மரப்படுக்கைனு தேவையான டிசைன்கள் குவிஞ்சிருக்கு. இதையும் நாம  பயன்படுத்தலாம். படுக்கை அறை நமக்கான அறை. அதனால அங்க பிங்க் அல்லது லாவண்டர் நிறங்களை தீட்டலாம். சில வீடுகள்ல  குழந்தைகளுக்குனு தனியா அறைகள் இருக்கும். அந்த வீடுகள்ல பெண் குழந்தை இருந்தா பிங்க் நிறத்தைத்தான் அடிக்கணும்... ஆண் குழந்தைகளுக்கு  அது சரிப்படாதுன்னு சில பேர் நினைக்கிறாங்க. அப்படியெல்லாம் எதுவுமில்லை. பிங்க் நிறத்துலயே பல ஷேட்ஸ் இருக்கு. அதுல ஒன்றை ஆண்  குழந்தை தூங்கற ரூம்ல அடிக்கலாம். 

வரவேற்பறைல அதாவது, ஹால்ல நாற்காலிங்க மரத்துல இருந்தா அங்க இருக்கிற திரைச்சீலைகள்ல மரச்சட்டம் வைக்கலாம். சுவத்துல என்ன  வண்ணம் இருக்கோ அதுக்கு தகுந்தா மாதிரி ஸ்கிரீன் கட்டினா எடுப்பா இருக்கும். இல்லைனா கான்ட்ராஸ்ட் நிறத்துலயும் அமைக்கலாம்.  இப்ப அதிகமா கண்ணாடில செய்த பொருட்களை ஹால்ல வைக்கிறாங்க. இது இருக்கும் இடத்தை பெருசா காட்டும். தவறி விழுந்தா உடைஞ்சுடும்.  அதனால கைக்கு எட்டாத பகுதிகள்ல கண்ணாடி சாமான்களை வைக்கிறதுதான் நல்லது.

வரவேற்பறை சின்னதா இருந்தா பெரிய சோபா செட்டுகளை பயன்படுத்த வேண்டாம். அதுக்கு பதிலா சின்ன கவுச் இல்லைனா திவான் மாதிரியான  மெத்தை விரிப்புகளை போட்டா பார்க்க அழகா இருக்கும். சின்னச் சின்ன சதுர வடிவத்துல பொருட்களை வைச்சா இதுக்கு பக்கத்துல ஒரு பெரிய  ஸ்டாண்டை வைக்கணும். அப்பதான் நாம வைச்சிருக்கிற பொருட்களை இது தனிச்சுக் காட்டும். முக்கியமா ஒரு அறைல எல்லாமே மரத்துல செய்த  பொருளா இருக்குன்னு வைச்சுக்குங்க... அந்த நிறத்துலயோ இல்ல அது சார்ந்த பொருட்களோதான் அங்க இருக்கணும். 

உதாரணத்துக்கு மர சோபா செட் முன்னாடி பீங்கான் டீப்பாய் நல்லா இருக்காது இல்லையா? பதிலா மர டீப்பாய் இருக்கலாம். இல்லைனா டீப்பாயின்  கால் மரத்துலயும் மேல் பகுதி கண்ணாடிலயும் இருக்கலாம்...’’ என்று சொல்லும் ராதா பிரபு, வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று அலங்காரப்  பொருட்களை வாங்கினாலே போதும் என்கிறார். ‘‘இப்ப சென்னைல ஏராளமா கண்காட்சிகள் நடக்குது. அங்க போகற மக்கள், பார்க்கிற பொருட்களை  எல்லாம் வாங்கிடறாங்க. ஆனா, வீட்ல எங்க வைக்கிறதுன்னு தெரியாம ஏதாவது ஒரு இடத்துல அதை குவிச்சிடறாங்க. இதுக்கு பதிலா  அத்தியாவசியமான பொருட்களை மட்டும் வருஷத்துக்கு இரண்டு இல்லைனா மூன்றுவாங்கினா போதும். அடுத்த வருஷம் அது பழசானதும் ஈசியா  வேற மாத்திடலாம். 

இப்படி செய்யறப்ப வீடும் எப்பவும் புதுசு மாதிரியே தெரியும்.சின்ன விஷயம் சொல்றேன். வீட்ல மர ஸ்டூல் இருக்கு இல்லையா? அதுக்கு நீலம்,  பச்சை, மஞ்சள் மாதிரியான பளீர் நிறங்களை அடிச்சு மேல பூக்களை வரைஞ்சா பார்க்கவே அழகா இருக்கும்...’’ என்றவரிடம் டைல்ஸ் மற்றும்  அலமாரிகள் குறித்து கேட்டோம். ‘‘தரைக்கு பெரிய வெர்டிபைட் டைல்ஸ் போடறது இப்ப வழக்கமா இருக்கு. மார்பிள், கிரானைட் மாதிரி இல்லாம  டிசைன் டிசைனா இது வர்றதால எல்லாரும் இதை விரும்பறாங்க. விலையும் குறைவு. வெளிர் நிறங்கள் பார்க்க அழகாவும், அறைகளை பெருசாவும்  எடுத்துக் காட்டும்.

அந்தக் காலத்துல வீட்ல துணிகளை வைக்க அலமாரி இருக்கும். அதுல துணிகளை அடுக்கி வைக்கறது வெளிப்படையாக தெரியும். அப்புறம் துணிகள்  இருக்கறது தெரியாம இருக்க பீரோ பயன்படுத்த ஆரம்பிச்சோம். இப்ப கப்போர்ட், வார்ட் ரோப் பயன்படுத்தறோம். இதுக்கு அறை சுவத்துல தனியா  இடம் ஒதுக்கறதால தாராளமா ஸ்பேஸ் கிடைக்கும்.  சமையலறையை பொறுத்தவரை மாடுலர் கிச்சன்தான் அழகுன்னு பலரும் நினைக்கிறாங்க.  இதுக்காக பல லட்சங்களும் செலவு பண்ணறாங்க. ஆனா, அதே அமைப்புல அழகாவும், சிம்பிளாவும் செய்ய முடியும். மேடையை கடப்பாக்கல்லுல  அமைச்சு அதுக்கு அறைக் கதவு போட்டுட்டா போதும். மாடுலர் கிச்சனாகிடும். 

சின்ன வீடுகள்ல டைனிங் டேபிள் போட முடியாது. அதனால ஒரு பலகையை சுவத்துல பொருத்திடலாம். சாப்பிடறப்ப அதை கீழ இறக்கினா,  அதுதான் டைனிங் டேபிள். சாப்பிட்ட பிறகு மறுபடியும் அதை மேலே பொருத்திடலாம். தேவைப்பட்டா அதுல அழகான பெயின்டிங்ஸ் வரையலாம்...’’  என்று சொல்லும் ராதா பிரபு, வீட்டை அலங்கரிக்க சில டிப்சும் கொடுத்தார். ‘‘வீட்ல பால்கனி இருந்தா, அங்க தொட்டி வைச்சு செடி வளர்க்கலாம்.  பால்கனி இல்லைனா, ஹால்ல சின்ன தொட்டி வைச்சு வீட்டுக்குள்ள வளர்க்கக் கூடிய செடிகளை வளர்க்கலாம். 

சின்ன இடத்துல பெரிய பொருட்களை அடைக்கக் கூடாது. காரணம், எல்லார் வீட்டிலும் பெரியவர்களும் குழந்தைகளும் இருக்காங்க. அவங்களுக்கு  தாராளமா இடம் இருந்தாதான் வசதியா இருக்கும். எளிதா உடையக் கூடிய பொருட்களை கை படும் இடத்துல வைக்கக் கூடாது. அலங்கரிக்க பயன்  படக்கூடிய பொருட்கள் வாங்கறப்ப அது வண்ணமயமா இருந்தா அழகா இருக்கும். முக்கியமா வீட்டை  சுத்தமா வைச்சுக்கணும். மாசம் ஒருமுறை  ஒட்டடையும், வாரம் ஒருமுறை டி.வி., அலமாரிகள்ல இருக்கிற தூசிகளையும் தட்டணும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீட்டை மாப் போட்டு  துடைக்கணும். இதெல்லாம் தவறாம செய்தாலே அவரவர் இருக்கும் வீடு அவரவருக்கு மாளிகைதான்...’’ என்று சிரிக்கிறார் ராதா பிரபு. 

No comments:

Post a Comment