கோவை மாவட்டம் காரமடை பகுதியில் இரண்டரை சென்ட் நிலம் வாங்கினேன். பஞ்சாயத்து அப்ரூவல்தான். ஆனால், வீடு கட்ட வங்கியை அணுகிய போது, பஞ்சாயத்து அப்ரூவலுக்கு வங்கிக் கடன் கிடையாது என்று சொல்லி விட்டார்கள். பஞ்சாயத்து அப்ரூவலுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுப்பதேன்?- சரவணன், கோவை
இதற்குச் சென்னையைச் சேர்ந்த வங்கியாளர் சுமதி பதில் அளிக்கிறார்.
பொதுவாக சி.எம்.டி.ஏ. மற்றும் டி.டி.சி.பி. அப்ரூவல் மனைகளில் பெரிய அளவில் பிரச்சினை வருவதற்கு வாய்ப்பே இல்லை. மனைக்கான கிரயப் பத்திரத்தில் தொடங்கி, பட்டா உள்ளிட்ட பல ஆவணங்களையும் தொடர்புடைய அமைப்புகள் அலசி ஆராய்ந்துவிடும். மேலும் விதிமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்ட லேஅவுட்களுக்கு மட்டுமே அவை அனுமதி கொடுக்கின்றன.
ஆனால், பஞ்சாயத்து அப்ரூவலில் மனைக்கான ஆவணங்கள், லேஅவுட் பிளான்கள் எதையும் பஞ்சாயத்துத் தலைவரோ, பஞ்சாயத்து அதிகாரிகளோ பெரிய அளவில் பார்ப்பதில்லை. எனவே ஆவணங்கள் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை வாய்ந்தவை என்பதில் வங்கிகளுக்குச் சந்தேகம் வருவதுண்டு.
சென்னை முழுவதும், காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில பகுதிகள் சி.எம்.டி.ஏ. அப்ரூவல் கீழ் வருகின்றன. மற்ற அனைத்துப் பகுதிகளும் டி.டி.சி.பி. அப்ரூவல் கீழ்தான் வருகின்றன. பொதுவாக வீடு கட்டும்போது சி.எம்.டி.ஏ., டி.டி.சி.பி. அப்ரூவல் வாங்குவதோடு உள்ளாட்சி அமைப்புகளிடமும் அனுமதி பெற வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என எதுவாக இருந்தாலும் இதுதான் நடைமுறை. இப்படி இரு அமைப்புகளிடமும் அனுமதி பெற்ற வீட்டு மனைகளுக்கு வங்கிகள் கடன் அளிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. வெறும் பஞ்சாயத்து அப்ரூவல் மட்டும் வாங்கி விட்டு கடன் கேட்டால் வங்கிகள் கடன் அளிக்காது.
நீங்கள் வாங்கிய இடத்தில் அரசு திட்டம் ஏதேனும் வருகிறதா என்பது சி.எம்.டி.ஏ. அல்லது டி.டி.சி.பி. அமைப்புகளுக்குத்தான் தெரியும். இதற்கு விடை கிடைக்காமல் வங்கிகள் கடன் அளிக்காது. பஞ்சாயத்து அப்ரூவல் பெற்ற உங்கள் நிலத்துக்கும் இது பொருந்தும். நீங்கள் கோவை மாவட்டம் என்று சொல்லியிருப்பதால் டி.டி.சி.பி. அப்ரூவல் வாங்கி, பின்னர் வங்கிக் கடன் கோரி விண்ணப்பிக்கலாம்.
மேலும் வங்கிகள் கேட்டும் ஆவணங்களை சரியாக வழங்கிவிட்டால் கடன் எளிதாகப் பெற்று விடலாம்
******<வட்டி ஹராம் >