Friday, October 17, 2014

உணவு, மேக்கப்... இரண்டுமே சிம்பிள்தான்!

உணவு, மேக்கப்... இரண்டுமே சிம்பிள்தான்!
ஸ்ரீதிவ்யாவின் பியூட்டி ரகசியம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மூலம், தமிழ்த் திரைக்கு வந்த இருபது வயசு இளம் சிட்டு ஸ்ரீதிவ்யா. எளிமையான அழகினால் ரசிகர்களை ஈர்த்தவர். ''படத்தில் நடிக்க, முக்கியத் தகுதி திறமை மட்டுமல்ல, அழகும் அவசியம்'' என்கிற ஸ்ரீதிவ்யாவின் பியூட்டி சீக்ரெட்ஸ் இங்கே... 
'வெயில், மழைனு எப்போதும் ஷூட்டிங் போக வேண்டி இருக்கும். உங்க சருமத்தை எப்படிப் பாதுகாக்கிறீங்க?'
'உண்மையைச் சொல்லணும்னா, இதுக்குன்னு நான் ஸ்பெஷல் கேர் எடுத்தது இல்லை. அழகுசாதனப் பொருட்களை அதிகமாப் பயன்படுத்த மாட்டேன். ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து வந்துட்டா, அதுக்கேத்த மாதிரி நம்மை மாத்திக்கணும். அதுக்குன்னு நம்மோட இயல்பையும் விட்டுடக் கூடாது. சினிமா மேக்கப் போட்டுத்தான் ஆகணும், அதேசமயம் என்னோட பழக்கத்தையும் மாத்திக்க முடியலைங்கிறப்ப, இயற்கையான முறையில் ப்ளீச், ஃபேஷியல் செஞ்சுப்பேன். படத்துக்காக கொஞ்சமா மேக்அப். ஷூட்டிங் முடிஞ்சதும், அதைக்கூட துடைச்சு எடுத்துடுவேன். என் அழகுக்கு வயசுகூட ஒரு 'ப்ளஸ்’தான். வயசு ஆக ஆக இளமை 'டாட்டா’ சொல்லிடும். அதனால எப்பவும் சந்தோஷமா சிரிச்ச முகத்தோட இருந்தா, அதைவிடப் பெரிய அழகு எதுவும் இல்லை.'
'என்ன மாதிரியான உணவு சாப்பிடுவீங்க? உங்களுக்குப் பிடிச்ச உணவு என்ன?'
'என் அம்மா சமைக்கிற பச்சடி, காய் குழம்பு எப்பவும் பிடிச்ச உணவு. சாப்பிடற அளவு ரொம்ப முக்கியம். சின்ன வயசிலேர்ந்தே என் அம்மா நிறையத் திணிக்காம, சத்தான உணவா அளவா சாப்பிடப் பழகவெச்சாங்க. சமைச்ச உணவைவிட, சுலபமா உடம்புக்கு சத்துக்களைத் தர்ற காய்கறி சாலட், பழங்களை விரும்பிச் சாப்பிடுவேன். அந்தந்தக் காலத்துல கிடைக்கிற‌ பழங்கள் எல்லாத்தையும், 'இது வேணும்... வேண்டாம்’னு தவிர்க்காம‌ சாப்பிடுவேன். பலாப்பழம், தர்பூசணி, பப்பாளி ரொம்பப் பிடிக்கும். எல்லாத்தையும்விட எனக்கு மாம்பழம்னா உயிர். எந்தப் பழத்தையும் ஜூஸ் பண்ணிக் குடிக்க மாட்டேன்.  பல்லுல கடிச்சுச் சாப்பிடறதுதான் சுவை... சத்தும்கூட!''  
''டென்ஷன் ஸ்ட்ரெஸ் வந்தா, எப்படிச் சமாளிப்பீங்க?''
'நான் ரொம்ப சென்சிட்டிவ் டைப்.  முன்னே யாராவது  என்னை ஏதாவது சொன்னாங்கன்னா, ரொம்பக் கஷ்டமா இருக்கும். வீட்லகூட அம்மா எதாவது கோபமா சொல்லிட்டாங்கன்னா போதும்... செம மூட் அவுட் ஆகிடுவேன். கோபத்தை  மனசுக்குள்ளே போட்டுப் பூட்டிவெச்சுப் புழுங்கிடுவேன். ஏன் இப்படிச் சொன்னாங்கன்னு நினைச்சு ரொம்ப ஃபீல் பண்ணுவேன். என்னோட இந்த குணத்தால், நிறைய நண்பர்களைக்கூட இழந்திருக்கேன். ஆனா இப்ப, உணர்வுகளை ஓரளவுக்கு பேலன்ஸ் பண்ணக் கத்துக்கிட்டேன். மன அழுத்தம் இருந்தா, உடம்பும் மனசும் நம்ம கட்டுப்பாட்டை மீறிப் போயிடும். கோபம், இயலாமை, அழுகை எப்படி வேணா ரியாக்ட் பண்ணத் தோணும். அப்படிப்பட்ட சமயங்கள்ல நான் என்னோட கவனத்தை திசை திருப்பிவிடுவேன். கொஞ்ச நேரம் அமைதியா எதுவும் பேசாம இருப்பேன். சில சமயம் அந்த இடத்தை விட்டு விலகி இயற்கையை ரசிச்சபடி, வெளியில் நடக்க ஆரம்பிச்சிடுவேன். எதுவும் முடியலைன்னா, ரெண்டு நிமிஷம் கண்ணை மூடிட்டு 'ரிலாக்ஸ்’ பண்ணிப்பேன். இப்படி ஏதாவது பண்ணி, என்னை 'ரெஃப்ரெஷ்’ பண்ணிக்கிறதுனால, எப்பவும் நோ டென்ஷன். ஒன்லி கூல்!'
உமா ஷக்தி

'ஹேர் கேர்’ டிப்ஸ்
நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய் வகைகளைச் சமமாக எடுத்து, தினமும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தலையில் தடவி ஊறவையுங்கள். பிறகு ஷாம்பு போட்டு அலச வேண்டும். நல்லெண்ணெய் குளிர்ச்சி, சளி பிடிக்கும் என்பதால், சிலர் சேர்க்க மாட்டாங்க, சிலருக்கு கடுகு எண்ணெய் சூடு, உடம்புக்கு ஆகாது என்பார்கள். இந்த இரண்டு எண்ணெயையும் சேர்க்கும்போதுதான் அதனுடைய பலன்கள் முழுமையாகக் கிடைக்கும். குளிர்ச்சியை, சூடு சமன் செய்துவிடும். தலைமுடியைச் செழிப்பாக வளரவைக்கும். முடி கொட்டுபவர்கள் இந்தக் கலவை எண்ணெயைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.
'ஸ்கின் கேர்’ டிப்ஸ்
ஸ்ட்ராபெர்ரி பழம் மற்றும் விதையுடன் கூடிய பன்னீர் திராட்சை இரண்டையும் அரைத்து ஒரு ஏர் டைட் டப்பாவில் போட்டு ஒரு நாள் அப்படியே வைத்திருக்கவேண்டும்.  (ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம்) மறுநாள் இது இயற்கையாகவே புளித்துவிடும். இந்தக் கலவையை முகம், கன்னம் பகுதியில் பூசி, மூன்று நிமிடம் ஊறவைத்துக் கழுவவேண்டும். இயற்கையான 'ப்ளீச்’ என்பதால், முகம் பளிச்சென ஆகிவிடும். வறண்ட சருமத்தினர், இந்தக் கலவையுடன் தேன் சேர்த்துத் தடவினாலே, முகம் தாமரைப் பூ மாதிரி ஃப்ரெஷாக இருக்கும்.

No comments:

Post a Comment